323 தேரின் மணியுங்கல் செருக்குறல் வீணே - செல்வச் செருக்கு 2
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
செங்க’ல்’வெண்கல் கருங்கல்லை நவமணிகள் எனச்செல்வர்
..சேர்ப்பார் யாமுஞ்
செங்க’ல்’வெண்கல் கருங்கல்லைச் சேர்த்திட்டோ மிருவ’ர்’கல்லுஞ்
..சீர்தூக் குங்கால்
நங்கல்லே யிடையதிகம் எங்கணுமுண் டெதிர்ப்போரை
..நாசஞ் செய்யும்
பங்கமுறச் செல்வ’ர்’நம்மின் மிக்கோரென் றகங்கரிக்கும்
..பான்மை யென்னே. 2
- செல்வச் செருக்கு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மாணிக்கம், வைரம், நீலம் முதலிய கற்களை நவமணிகள் எனச் செல்வர்கள் சேர்ப்பார்கள்.
நாமும் செங்கல், வெள்ளைக்கல், கருங்கல் இவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறோம்.
இருவர் கற்களையும் தராசிலிட்டு நிறுத்துப் பார்க்கும்போது நம்முடைய கல்லே எடை மிகுதியாக இருக்கும். எல்லா இடங்களிலும் கிடைக்கும். எதிர்ப்போரையும் அழிக்கும். செல்வர்களை நாணம் அடையச் செய்யும்.
எனவே, செல்வர்கள் நம்மை விடச் சிறந்தவர்கள் என்று செருக்குக் கொள்ளும் தன்மை என்னவாகும்? என்கிறார் இப்பாடலாசிரியர்.
செங்கல் - மாணிக்கம். வெண்கல் - வைரம். கருங்கல் - நீலம்.
செங்கல் - சுட்டமண். வெண்கல் - பாறைக்கல். கருங்கல் - மலைக்கல்.
சீர் - தராசு. நாசம் - அழிவு. பங்கம் - நாணம். அகங்கரித்தல் - செருக்குறல். பான்மை - தன்மை.