புன்னைப் பரப்புநீர் தாவும் படுகடல் தண்சேர்ப்ப மரத்தின்கீழ் ஆகா மரம் - பழமொழி நானூறு 311

நேரிசை வெண்பா

மன்னவன் ஆணைக்கீழ் மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப்பெறுப - புன்னைப்
பரப்புநீர் தாவும் படுகடல் தண்சேர்ப்ப!
மரத்தின்கீழ் ஆகா மரம். 311

- பழமொழி நானூறு

பொருளுரை:

புன்னைப் பரப்பில் நீர் பாய்கின்ற மிக்க நீர் பொருந்திய கடலை உடைய குளிர்ந்த நாடனே!

ஒரு மரத்தின் கீழே வைக்கப்பட்டுள்ள மரம் ஓங்கி வளர்தல் இல்லை. அதுபோல, அரசனது ஆணை செல்கின்ற இடத்தில் ஏனையோர் தம்மை மிகுத்துக் கூறும் தமது ஆணையை எவ்வகையால் செலுத்துவார்கள்; செலுத்தக் கூடாதாம்.

கருத்து:

அரசன் ஆணையின்கீழ், பிறர் தமது ஆணையைச் செலுத்துதல் இயலாதாம்.

விளக்கம்:

மரத்தின்கீழ் மரம் வளராதது போல அரசனாணையின் கீழ் பிறராணை நடைபெறாது; மீக்கூற்றம் - மேம்படுத்திக் கூறுதல்; அஃது ஆணைக்கு ஆயிற்று.

மரத்தின் கீழ் ஆகா மரம்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Apr-23, 9:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே