முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு- பழமொழி நானூறு 347
நேரிசை வெண்பா
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழியறியான் கூறல் முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு. 347
- பழமொழி நானூறு
பொருளுரை:
வினவுவானும் விடைகொடுப்பானுமாகிய இருவரும் கூடிச் சொல்லத் தொடங்கிய வார்த்தையின்கண்,
பின்னாக விடைகூறத் தக்கவன் வினாவறியாது முற்பட்டு ஒன்றனைக் கூறினால், விடை கூறுதலறியாதவனாய் முடியும்;
வினாவிற்கு முன்னர் விடைகூறுதல் முழந்தாள் கிழிந்து புண்பட்டவனை அஃது அறியாது மூக்கை இழைகொண்டு கட்டுவதோடு ஒக்கும்.
கருத்து:
வினாவறிந்து விடைகூறுதல் வேண்டும்.
விளக்கம்:
முழந்தாள் கிழிந்தமை அறியாது மூக்கை இழைகொண்டு மூடியது போன்று வினாவின் தன்மையறியாது விடை கூறுதல் ஆகும்.
'முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு' - இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.