முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு- பழமொழி நானூறு 347

நேரிசை வெண்பா

துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழியறியான் கூறல் முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு. 347

- பழமொழி நானூறு

பொருளுரை:

வினவுவானும் விடைகொடுப்பானுமாகிய இருவரும் கூடிச் சொல்லத் தொடங்கிய வார்த்தையின்கண்,

பின்னாக விடைகூறத் தக்கவன் வினாவறியாது முற்பட்டு ஒன்றனைக் கூறினால், விடை கூறுதலறியாதவனாய் முடியும்;

வினாவிற்கு முன்னர் விடைகூறுதல் முழந்தாள் கிழிந்து புண்பட்டவனை அஃது அறியாது மூக்கை இழைகொண்டு கட்டுவதோடு ஒக்கும்.

கருத்து:

வினாவறிந்து விடைகூறுதல் வேண்டும்.

விளக்கம்:

முழந்தாள் கிழிந்தமை அறியாது மூக்கை இழைகொண்டு மூடியது போன்று வினாவின் தன்மையறியாது விடை கூறுதல் ஆகும்.

'முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு' - இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jun-23, 8:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே