சாவாதான் முன்கை வளையுந் தொடும் - பழமொழி நானூறு 384

நேரிசை வெண்பா

இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின் எதிர்நிற்றல் ஏதம் - அகலப்போய்
என்செய்தே யாயினும் உய்ந்தீக சாவாதான்
முன்கை வளையுந் தொடும். 384

- பழமொழி நானூறு

பொருளுரை:

போர் செய்தலில் வல்லமை உடையவர்களை இகழ்ந்து, வலிமை குன்றி நின்றோர் போரில் எதிர்த்து நிற்றல் அவருயிர்க்கு இன்னல் தருவதாம்;

ஆதலின், நெடுந்தொலைவிற் சென்று எத்தகைய சூழ்ச்சியைச் செய்தேயாயினும் உயிர் பிழைக்க; தப்பி உயிர் பிழைத்திருப்பவன் ஒருகால் அவர்களை வென்று தனது முன்கையில் கடகத்தையும் அணிந்து கொள்ளுவானாதலால்!.

கருத்து:

வலியாரோடு போர்செய்யத் துணிந்து நிற்றல் உயிருக்கு இறுதி பயப்ப தொன்றாம்.

விளக்கம்:

'யாண்டுச்சென் றியாண்டு முளராகார்' என்றமையின் அகலப் போகிய விடத்தும் ஆராய்ந்து அறிந்து இறுதி விளைப்பர். ஆதலின் இன்னதென் றுரையாது என்செய்தேயாயினும் உய்ந்தீக என்றார்.

உயிர்பிழைத்திருப்பவன் அவர் மெலியராய காலத்து வென்று வாகுவலயம் பூணலாமாதலின் எவ்வகை யாயினும் தப்பிப் பிழைத்தல் நன்று என்பது. இக என்னும் முன்னிலையசை ஈக என்று நீண்டு நின்றது.

'சாவாதான் முன்கை வளையுந் தொடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-23, 8:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே