மனிதம்
(சிறுகதை)
பத்தாம் இலக்க மலையில் தேயிலைக் கொழுந்து கிள்ளிக் கொண்டிருந்த ஆனந்திக்கு மனசெல்லாம் பிள்ளை மடுவத்திலேயே இருந்தது. பிரசவம் முடிந்த ஒரு மாதத்திலேயே குழந்தையை ஆயாவிடம் கொடுத்துவிட்டு வந்தவளுக்கு குழந்தையின் நினைவாகவே இருந்தது. வீட்டிலிருந்திருந்தால் இப்போதைக்கு இரண்டு முறைக்கு மேல் பால் புகட்டியிருப்பாள். பிள்ளையை நினைக்க நினைக்க அழுகையாய் வந்தது. கூடவே பால் சுரந்த மார்பு விம்மிப் புடைத்து வேதனையைக் கூட்டியது. பாலூட்டும் தாய் என்பதால் கங்காணி பதினொரு மணிக்குத்தான் அனுப்புவார். இப்போது மணி பத்து. இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கின்றது. அதற்குள் ஒரு ஐந்து கிலோ தேயிலையாவது கிள்ளியாக வேண்டும். குறைந்தது பதினைந்து கிலோவாவது இல்லையென்றால் அன்றைக்கு முழுநாள் சம்பளம் கிடைக்காது. தலைவிதியை நொந்துகொண்டு வேகவேகமாக கொழுந்து பறித்தவளிடம் பக்கத்து நிரையில் நின்ற பார்வதி கேட்டாள். "என்ன ஆனந்தி முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு இருக்க", ' இல்லக்கா.. புள்ளைய மடுவத்திலே விட்டுட்டு வந்தேன். இப்போ பால்கொடுக்கிற நேரம். ஆறு மாசத்துக்கு தாய்ப்பால் கொடுத்தே ஆகணும்முன்னு ஆஸ்பத்திரியிலே சொல்லியிருக்காங்க, வேற பாலும் கொடுக்க முடியாது. பசியிலே அழுவான் அதான் என்ன செய்யிறதுன்னு தெரியல..' ' ஓ..அதுவே விசயம். கங்காணி இப்போ அனுப்ப மாட்டானே.. இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கேட்டுப்பாரு அனுப்புவான்.' ' என்னக்கா அவன் இவன்னு சொல்ற?' ' 'கர்வம் பிடிச்சவனை பிறகு எப்படி சொல்றது.. கொஞ்சங்கூட ஈவு இரக்கம் இல்லாதவன்' .. ஏதோ பழைய கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு பேசினாள். பழைய கோபம் என்றாலும் கங்காணி 'ஈவு இரக்கம்' இல்லாதவன் என்பதில் உண்மையில்லாமலில்லை.ஒரிரு மாதத்திற்கு முன் ஆனந்தியைப் போலவே ஒரு இளந்தாய் பிள்ளைக்குப் பாலூட்டவேண்டி சற்று நேரத்துடன் செல்லக் கேட்டபோது கெட்ட வார்த்தையில் திட்டியது ஞாபகம் வந்தது. இன்று அவளின் நிலைமையில் இருக்கும் ஆனந்தியும் போய் லீவு கேட்டால் அவளுக்கும் அதே பதில் கிடைக்கலாம். என்றாலும் குழந்தைக்காகவும் ஒரு சாண் வயிற்றுக்காகவும் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதாகிறது. சில நிறுவனங்களில் பிரசவித்தப் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவு கிடைத்து விடுகிறது. ஆனால் வருடக்கணக்கில் உழைத்துக் கொடுக்கும் தோட்டத்துப் பெண்களுக்கு எந்த சலுகையும் இல்லை. வேலை செய்தால் சம்பளம். அதுவும் குறிப்பிட்டக் கிலோ தேயிலைக் கொழுந்து பறித்தால் மட்டுமே. ஒரு கிலோ குறைந்தாலும் அரைநாள் சம்பளமே வழங்கப்படுகிறது. புருசனும் தோட்டத்தில்தான் வேலை. சென்ற மாதம் கவ்வாத்து வெட்டச் சென்றவன் வழுக்கி விழுந்து காலில் முறிவு ஏற்பட்டவே கட்டுப்போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரியில் கிடக்கிறான்.இவளுக்குப் பிரசவமும் அவனுக்கு சிகிச்சையுமென இரண்டும் ஒரே நேரத்தில் வந்துவிட்டாதால் சமாளிக்க முடியாத பணக்கஷ்டத்தால் பிள்ளையை பிள்ளை மடுவத்தில் விட்டுவிட்டு வேலைக்கு வந்துவிட்டாள். உதவிக்கு யாருமில்லை. சண்முகநாதனை ஆனந்தி விருப்பப்பட்டு எடுத்துக் கொண்டதால் இரு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புக் காரணமாக ஒரே தோட்டத்திலிருந்தும் இருவீட்டார் குடும்பத்திற்குமிடையே எதுவித ஒட்டுறவுமின்றி தனிக் குடித்தனம் நடத்துகிறார்கள். குழந்தைப் பெற்ற பெண் குடும்ப உறவுகளின் ஒத்தாசையின்றி வாழப் போராடுவதென்பது நீச்சல் தெரியாதவன் ஆற்றில் குதித்த நிலைக்கு ஒப்பானது. இருந்தும் வைராக்கியத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ வேண்டும் என்ற உறுதியுடன் யார் வாசலிலும் போய் நில்லாமல் இன்று வேலைக்கு வந்துவிட்டாள்.
மணி பத்தரையைத் தாண்டிய நிலையில் மெதுவாக கங்காணியிடம் சென்று நிலைமையை விபரித்தாள். ஆனந்தியின் நல்ல நேரமோ தெரியவில்லை. எப்போதும் சிடுமூஞ்சியாகவே இருக்கும் கங்காணி 'இந்தாம்மா.. நீ குழந்தைக்குப் பாலூட்டுவியோ இல்ல சோறூட்டுவியோ தெரியாது. அது உன்னோட பிரச்சினை.எனக்கு அந்திக்குள்ள பதினைந்து கிலோ கொழுந்து வேணும். இல்லாட்டி அரைநாள் சம்பளந்தான்..' 'சரிங்க கங்காணி' கூறிவிட்டுத் தேயிலை மலையிலிருந்து ஓட்டமும் நடையுமாக அந்த இரண்டு கிலோ மீற்றர் தூரத்து பதினைந்து நிமிடத்திற்குள் கடந்து வந்து பிள்ளையைத் தூக்கினாள். அவள் நினைத்ததுபோலே குழந்தைப் பசியால் துடித்துக்கொண்டிருந்தான். நேரத்தை வீணடிக்காமல் குழந்தைக்குப் பாலூட்டினாள்.
பகலுணவுக்குப் பின் பாலூட்டி மறுபடியும் மலைக்குச்சென்ற ஆனந்தியிடம் பார்வதி அக்கா பகல் நிறுவை பதியப்பட்ட அட்டையை நீட்ட வாங்கிப் பார்த்தாள். எட்டுக் கிலோ பதியப் பட்டிருந்தது. இன்னும் ஏழு கிலோ கொழுந்து பறித்தாக வேண்டும். இருக்கும் இரண்டு மணித்தியாலத்தில் சாத்தியமா என்று தெரியவில்லை. முழு பலத்தையும் கூட்டிக் கொழுந்து கொள்ள ஆரம்பித்த போதும் பிரசவித்த உடம்பு அதற்கு ஒத்துழைக்க மறுத்தது. இருந்தும் மூன்றரை மணிக்குள் பறித்தக் கொழுந்தைப் பார்வதி அக்கவிடம் கொடுத்து மாலை நிறுவைக்கு கொடுத்துதவக் கேட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினாள். ஏழு கிலோவிற்கு குறைவாகவே இருக்கும் இன்றைக்கு அரைநாள் சம்பளந்தான் கிடைக்குமென்பது அவளுக்குத் தெரியும். சண்முகநாதனுக்கு காலுடையாமல் இருந்திருந்தால் இப்போதைக்கு வேலைக்குப் போயிருக்க மாட்டாள். இப்படி நடக்குமென்று யார் கண்டது எல்லாம் அவன் விட்ட வழி. மனதைத் தேற்றிக்கொண்டு குழந்தையை தூக்கி எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போளாள். பக்கத்து நிரையில் பார்வதி அக்கா கிடைத்தது சற்று ஆறுதல். கொழுந்து நிறுவை செய்யும் இடத்திற்கு ஆனந்தியின் கூடையையும் சுமந்து சென்று அட்டையில் பதிவு செய்து கொடுத்து உதவுகிறார். பகல் நிறுவை நேரத்தில் கூடையைக் கொடுத்துவிட்டு வந்ததுபோலவே இப்போதும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாள். என்னவாகுமோ தெரியவில்லை.குழந்தையின் பசிப் போக்கித் தொட்டிலிட்டவள் அடுப்புமூட்டித் தேத்தண்ணி வைத்தாள். சண்முகநாதன் இன்னும் இரண்டொருநாளில் டிக்கெட் வெட்டி வந்துவிடுவான். இரவில் துணைக்கு அடுத்த வீட்டுப்பாட்டி வந்து படுத்துக் கொள்வதால் அச்சமின்றி சமாளிக்கிறாள். தேத்தண்ணியை குடித்து முடித்தக் கையோடு குழந்தை விழித்துக் கொள்வதற்கு முன்னே இரவு சமையலை முடித்துவிட வேண்டுமென எண்ணியவளாய் அடுத்த வீட்டுப் பாட்டிக் கொடுத்த அவரைக்காயின் நாரை உரித்தெடுத்துக் கொண்டிருக்க வாசலில் யாரோ 'ஆனந்தி.. ஆனந்தி.. ' என அழைக்கவே எட்டிப்பார்த்தாள். அங்கே கூடையுடன் பார்வதி அக்கா நின்றிருந்தார்.
"இந்தா உன் கூடையும் கார்டும்" நீட்டிய பார்வதியிடமிருந்து அட்டையை வாங்கிப் பார்த்தாள். அதில் பதினைந்து கிலோ பதியப்பட்டு முழுநாள் சம்பளம் உறுதியாகியிருந்தது. 'அக்கா. நான் கொறவாத்தான் கொழுந்து எடுத்திருந்தேன் .. பதினைந்து கிலோ பதிஞ்சிருக்கே.. எப்டிக்கா..!' ஆச்சரியம் மிகுந்தவளாய்க் கேட்டாள்.' ஆமா. பதிமூனு கிலோவுக்கு கொறவாத்தான் இருந்துச்சி. ஆத்து லயத்து காமாச்சி, பணிய லயத்து தெய்வான, மீனாச்சி, நான் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கொரு பிடி எங்க கூடையிலே இருந்து போட்டு பதினஞ்சு கிலோவாக்கிட்டோம். நீ பச்ச ஒடம்புக்காரி. ஒன்னபோல குழந்தை பெத்து வளத்தவுங்கத்தான் நாங்களும், ஒன்னோட கஷ்டம் எங்களுக்கும் தெரியும்.. இந்த நேரத்தில இந்த சின்ன ஒதவியக்கூட செய்யாட்டி நாங்க என்ன மனுசங்களா..' கூறிவிட்டுப் பதிலை எதிர்பாராமல் செல்லும் பார்வதி அக்காவைப் பார்த்த ஆனந்தி கோடி கூடிய கொட்டிக் கொடுக்காவிட்டாலும் இந்த மாதிரி சின்னச் சின்ன உதவிகளில் இன்னும் இந்த பூமியில் மனிதம் வாழத்தான் செய்கிறது எனும் உண்மையை உணர்ந்து நெகிழ்ந்து கடவுளுக்கு நன்றி சொல்கிறாள்.**