இது நீங்களா..?- -பொள்ளாச்சி அபி

“எல்லோரும் விழியுங்கள்”
என்றது அவர் குரல்.
கேட்டவர்களோ இறுகமூடினர்
தம் கண்களை.! சிலர்
காதுகளைப் பொத்தினர்.

“உயிர்களுக்கு ஆதாரமான
இளங்கதிரவனைப் பாருங்கள்..!”
அனைவரும் மேற்கில்
திரும்பிக் கொண்டனர்.

“உடலை நீரால்
சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்”
அனைவரும் சேற்றைத்தேடி
பூசிக் கொண்டனர்.

“அடுத்தவருக்கும் ஈந்து
எளிய உணவைப் புசியுங்கள்.”
அவர்களோ மற்றவர்களின்
கையிலிருந்ததையும் பறித்தனர்.

“ஏன் எதிர்மறையாக,இயல்புக்கு மாறாக
அனைத்தையும் செய்கிறீர்கள்.?”
அவர்களோ,இங்கு இப்படித்தான்
நீங்கள் பைத்தியம் என்றனர்.

நான் கடவுள் என்றார்;..!
இங்கு வரும்வரை நாங்களும்
அதைச்சொன்னோம் என்றனர்.

அதற்குப்பிறகு அவர்
யாருக்கும் எதுவும் சொல்வதில்லை..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (15-Jan-12, 3:32 pm)
பார்வை : 312

மேலே