சொற்கள்..

எல்லோருமே வைத்திருக்கிறார்கள்
சொல்வதற்கான சொற்களை!

சொல்பவர்களால் அல்ல ..
சொல்லப்படும் அழகில்தான்
சிறப்பும்..! சிராய்ப்பும்..!

எல்லா சொற்களும்
நல்ல சொற்கள்தான்!


பழி...பாவம்.. பாராட்டு..
இழிவு..கழிவு..
எல்லாம்.. எல்லா சொற்களிலும்
இருந்து கொண்டுதான் இருக்கிறது!
துள்ளல்..
விள்ளல்..
கிள்ளல்..
எள்ளல்.. இப்படி
எல்லாத் தளங்களிளும் .....
எல்லா சொற்களும்!
எடுத்தாளும் வேகத்தில்
எல்லைகள் மாறுகிறது!

'அப்படியா...'
இந்த ஒரு சொல்லில்.....
ஆச்சரியமும் பூக்கும்..
அடுக்கடுக்காய்.கேள்விகளையும் விதைக்கும்.!

சொல்பவனின் அடையாளம்..
சொல்லப்படும் சொற்கள்!.

இனிமையான சொற்கள்..
இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமரும்!

உதடுகளின் வேசத்தில்
ஊர்வலம் நடத்தும் சொற்கள்
கால வெள்ளத்தில் காணாமல் போகும்!

சுவையான சொற்கள்
எதிரியும் எடுத்து ரசிப்பான்,,

அழகான சொற்கள்..
கவிதையாய் கலந்து நிற்கும்!

மௌனத்தையும்
உடைக்கும் புன்னகை!
அந்த
புன்னகையும் பூபாளமிசைக்கும்
புனிதமான சொற்கள் புறப்படும்போது!

சொற்கள்..
உதடுகள் ஒலிக்கும்
காற்றின் கோர்வைகள் அல்ல..
சரித்திரங்களையும்..
சாம்ராஜ்யங்களையும் உருவாக்கும் குறியீடு!
அன்பையும்.. பண்பையும் போதிக்கும்
மனித மனங்களின் அலைவீச்சு!

உயர்வும்..
தாழ்வும்..
உழைப்பில் மட்டுமல்ல..
சிந்தும் உன் சொற்களில் ...

எழுதியவர் : ந. ஜெயபாலன்,திருநெல்வேலி ந (21-Sep-12, 12:03 pm)
பார்வை : 152

மேலே