புலம்பல்கள்…. பகுதி---1 ( பரிதாபம் )

உயர உயர
பறக்க நினைத்து

சிறகை விரித்து
அகலப் பறந்து—
காற்றில் மிதந்து
மகிழ்வுறும் நேரம்-

கல்லடி பட்டு
குருதியில் நனைந்து
தன் சிறகுகளை
சுருக்கிக் கொண்டது

ஒரு சிறு பறவை!

இனி
அதன் வானில்
இறகின்
அகல விரிப்பிற்கு
இடமேயில்லை!

அது தன் கூட்டுக்குள்
ஒதுங்கி வாழ நினைத்து
இறகுகளோடு
தன் மனதையும்
சுருக்கிக் கொண்டது!

அதன் பயணம்
தொடங்காமலே
முடியப் பார்க்கிறது!

அதன் வாழ்க்கை
இனி ஒரு
எழுதாத் தொடர்கதை!

வலி எடுக்கத்தான் செய்யும்
எழுதும் கரங்களுக்கும்

அதன் பாரமான நாயகம்!

எத்தனை தவங்கள்?
எத்தனை பொறுமை?
எத்தனை த்யாகங்கள்?

எழுதும் கைகளுக்கு—
எழுதும் முன்பே
நழுவும்
எழுது கோலை சமாளிக்க—

அந்தப் பறவையின்
ஆறுதல் கூட
பயனற்றுப் போகின்றன!

சில மணி நேர
சுய சுகங்களுக்காக
உடனிருப்புகளின்
சஞ்சலங்களின் பலவீனத்தை
சாதகமாக்கிக் கொண்டு
ரத்தத்தையும் உறிஞ்சும்
இந்த சமுதாயத்தின்
நடைமுறையில்—

கற்றுக் கொள்ள
முயல்கிறது
அந்த குஞ்சு பறவை
சுயநலத்தை!

ஓ!
சுற்றி வந்து
கும்மாளம் அடிக்கும்
கூட்டத்தின் எகத்தாளம்

நச்சரிக்கின்றன—

பாதை மாறும்
அறியா உள்ளத்தின்
நிர்பந்தங்களை!

முடிவின் விளிம்பில்
மதில் மேல் பூனையாய்
பாவம்
அந்தக் குஞ்சுப் பறவை!

வானத்தைப் பார்த்தால்—
திட்டமிடாத பாதை!

காற்றின் வேகத்தை
ஆராய்ந்த்தால்

பொறுப்பற்ற ஆசுவாசம்!

விதியை நொந்தாலோ
பாவம்
சின்னஞ்சிறு உயிர் படைப்பு!

சில்லறை உலகிற்கு
சிதறும் எண்ணத்தின்
சலசலப்புகள்

புன்னகை முகத்தின்
மலைப்பான
பரிமாணமங்களாகத்
தெரிகின்றன!

எழுதியவர் : மங்காத்தா (25-Nov-12, 7:59 pm)
சேர்த்தது : மங்காத்தா
பார்வை : 136

சிறந்த கவிதைகள்

மேலே