[378] ஏசுவைப் பாடு, எம் பாவாய்!..(01)

செங்கழுநீர் தான்மலரச் சிற்றாம்பல் வாய்மூடச்
செங்கற் பொடி,உடையார் செவ்வாய் துதிபாடப்
பங்கமிலா நன்னெறியான் பாதம் பணிகின்றோம்!
அங்கமெலாம் மூடி அணியிழையே! தூங்குதியோ?
வங்கம் கதிர்தாண்டி வந்துனையும் தானேழுப்ப,
இங்கிதமோ? எம்பெருமான் யேசு,நம் பாவம் ,அறச்
செங்குந்தம் உள்வாங்கிச் சிந்தியநீர் வான்சிவக்கும்!
இங்கெழுந்து வந்து,அவ் விரங்கலைப்,பா டெம்பாவாய்!-------(01)

===============================================
பதவுரை :
செங்கழுநீர்--சிவந்த குவளை மலர்; சிற்றாம்பல்--சிறிய குமுத(தாமரை) மலர்;
பங்கமிலா--பாவமில்லாத; அங்கமெலாம்--உடலெல்லாம்; இங்கிதமோ?--இங்கு இதமோ-இங்கே இனிமையானதுவோ? செங்குந்தம்--(இரத்தத்தால்)சிவந்த ஈட்டியினை ; இரங்கலை--இறக்கம் மேலிட்டு அருளுதலை ;
===============================================
பொருளுரை:
சிவந்த குவளை மலர்கள் மலரச்
சிறிய குமுதமலர்கள் வாய்களை மூடிக்கொள்ள,
செங்கல் பொடியின் நிறத்தையுடைய உடையை அணிந்தவர்கள், தங்களுடைய சிறந்தவற்றையே பேசும் உயர்ந்த வாய்களினால் போற்றித் துதிபாடிக்கொண்டிருக்கப்,
பாவங்களற்ற நன்னெறியில் நடந்துகாட்டிய
பாதங்களை உடையவனைப் பணிந்து தொழுகின்றோம்! (நீ) உடலையெல்லாம் மூடியபடி நகைகளை அணிந்தவளாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றாயோ?
கதிரவனென்னும் இளஞ்சூரியன் வங்கக் கடல் தன்னைத் தாண்டிவந்து உன்னை எழுப்பிடவோ?அது அவ்வளவு இனிமையானதோ? நம் எல்லோருக்கும் தலைவனான இயேசு பெருமான், நம் எல்லோருடைய பாவங்களும் அழிந்து ஒழிந்து போகும்படியாக, இரத்தத்தினால் சிவந்து காணப்படும் ஈட்டியினைத் தனக்குள் வாங்கிக் கொண்டவராகச் சிந்திக்கொண்டிருக்கும் இரத்தத்தினால் வானமே சிவந்துகொண்டிருக்கின்றதே! நீ எழுந்து இங்கே வந்து அந்த அருளுதலைப் பாட வருவாயாக!
==============தொடரும்....

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (16-Dec-12, 7:42 am)
பார்வை : 149

மேலே