மூச்சுவிட்டால் போதும்

வார்த்தைகளில் பொய் தடவி
,,வசீகரத்தால் சிக்கவைத்து
சீரழிவை ஏற்படுத்தி
..சிந்தையினில் தீமூட்டி
போர்த்தொடுக்க சினமூட்டும்
..பொல்லாத மாந்தர்களால்
ஆர்பரிக்கும் மனசுக்குள்ளே
..அடங்காத வேதனைகள்

நம்பிக்கையின் வேர்தனையே
..நறுக்குதற்கு கோடரியை
தம்வசத்தில் வைத்திருக்கும்
..தரங்கெட்ட இவர்வாக்கு
சொம்பிலிட்ட விளக்காக
..சுயநலமாய் எரிவதனால்
வெம்பிவிடும் பிறர்மனதின்
,,வேதனைகள் அறியாதார்.

தமக்கான காலமது
..தங்கமான தென்னுமிவர்
நமக்கான காலமதை
,,நரகமான தாக்கிவிடும்
எமனாகி நடமாடும்
..இழிவான மனம்படைத்து
சமனாக தோன்றுமிவர்
..சாக்கடையின் துர்நாற்றம் .

இல்லையெனச் சொல்லாமல்
..எல்லாமும் வல்லவராய்
முல்லையென முகம்மலர்ந்து
..முட்டாளாய் ஆக்குதற்கு
அல்லுபகல் பாடுபடும்
..அற்பங்கள் இவராலே
தொல்லையது தானென்றும்
..தொடர்ந்துவரும் எம்மோடு.

வாக்கினிலே சுத்தமிலா
..வர்க்கங்கள் கண்காணும்
போக்கிரிகள் என்பதனை
..புரியாமல் மாட்டுகின்ற
தேக்கினையும் கரையான்போல்
,,தினந்தோறும் அரித்தெடுக்கும்
மூர்க்கமதை முன்னுணர்ந்து
..மூச்சுவிட்டால் அதுபோதும் .
..
..


..

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Dec-12, 2:21 am)
பார்வை : 104

மேலே