மாயமாய் போகும் மரங்கள்
குத்தி குத்தி நாளொன்றில்
விதைக்கப் பட்டேன் நானிங்கு
முட்டி முட்டி பூமிதன்னில்
முளைத்துவிடுவேன் நானென்றும்
வானம் பார்த்து பல இலைகள்
அகலமாக விரிக்கின்றேன்
எந்தன் நம்பிக்கையில் நானென்றும்
சுதந்திரமாக வளர்கின்றேன்
பிராண வாயுவை என்றென்றும்
பகலிலே நானும் கொடுத்திடுவேன்
கரியமில வாயுவை எந்நாளும்
இரவில் இரகசியமாய் விட்டிடுவேன்
ஆரோக்கியம் என்பதை மனிதனுக்கு
உடலிலும் உள்ளத்திலும் கொடுத்திடுவேன்
ஒற்றைக் காலில் தவமிருந்து
இலை மலர் காய் கனி தந்திடுவேன்
ஓங்கி உயர்ந்து வளர்ந்தாலும்
ஓயாது நிழலை கொடுத்திடுவேன்
இன்னும் சொல்லில் அடங்கா பலனை எல்லாம்
சோர்வற்று கொடுக்கிறேன் எந்நாளும்
ஆழப் புதைந்து போனாலும்
நான் வாழத்தானே வேரை புதைக்கின்றேன்
விதைத்தவன் விதைத்த இடத்திலிருந்து
நான் மாறியதில்லை எந்நாளும்
விசுவாசம் என்ற சொல்லையே நான்
சுவாசிக்கிறேன் என்றும் உயிராக
நன்றி மறக்கும் மனித இனமே
நாளொன்றில் என்னருமை புரியுமுனக்கு
என்னை வெட்டி போட்ட நீ
நட்டாயா என்னின் ஓர் இனத்தை
ஒடித்து வாழும் பண்புதனை
விட்டொழிக்காத மனித மனமே
என்னை அகற்றி வாழும் பண்பு தன்னை
ஏற்றுக்கொண்ட மனித இனமே
நாளும் பல துயர் வந்தாலும்
நாணி நடுங்குவதில்லை என் இனமோ
நானின்றி எந்நாளும் உன் உலகம்
உயிரோடு என்றும் வாழாது
நான் வாழும் வாழ்வில் என்ன குறைகண்டாய்
ஏன் என்னை தொடர்ந்து அழித்து செல்கிறாய் .
நால் வழிச்சாலை என்ற பெயரில்
மாண்டுபோகும் நாங்களெல்லாம்
நலம் வழி செல்லவில்லையோ நீ
நாலாபுறமும் திடல் தந்து சென்று விட்டாய்
வெப்பத்தையே ஏற்றி நீ
வெவ்வேறு தீங்கினை செய்து விட்டாய்
இன்னும் என்னென்ன செய்திடுவாய்
எல்லையில்லா பாவம் தன்னைச் சேர்க்க ...

