நேற்று அவள் இருந்தாள் மரணப் படுக்கையில் நீ.. செத்துக்...
நேற்று அவள் இருந்தாள்
மரணப் படுக்கையில் நீ..
செத்துக் கொண்டே நான்..
உன்னுள் மீதமிருப்பது கண்ணீர் மட்டும் தானா?
மகிழ்ச்சிப் பெருக்கில் நீ மாரணைத்த ஈரம் எங்கே?
கோடை கானலிலும் நாம் கலந்து போன நேரம் எங்கே?
பரவிக் கிடந்த உன் மேல் விழுந்து கிடந்த காலம் எங்கே?
ஆண்டுக்கு ஒருமுறை நீ பூப்பெய்தும் ஆடித் திங்கள் எங்கே?
சந்திரனை சடையில் சூடி முகம் ஒளிர்ந்த சித்திரை எங்கே?
இடை இடையே வளைந்த இடை இடையில் விரல் வருடும் சுகம் எங்கே?
வற்றா வளங்களோடு பற்றி என் பாதம் தொட்ட தடயம் எங்கே?
நான் அணைத்து, தழுவி, அனுபவித்து, உயிர் நனைத்த ஊடல் எங்கே?
என் காதலியே..
இந்த பாவி உன்னை விட்டு சென்ற துரோகம் தாளாமல் உன் மேனி வற்றிப் போனதா?
அல்லது கயவர்கள் கற்பழித்த காரணம் தெரியாமல் உள்நாக்கு உலர்ந்து போனதா?
இயலாமையின் உச்சத்தில் நான்..
மரணத்தின் விளிம்பில் நீ...
உயிர் பிரியும் தருவாயிலும் உயிர் தொடும் சுகம் தருகிறாய்.
கடைசியாக ஒரு புகைப்படம்.
முப்பது வருடம் கழித்து என் பேரன் உன்னை பற்றி கேட்க வாய்ப்புள்ளது.
ஒரு வழியாக நீண்ட குளியலுக்குப் பின் நான் கரை ஏறினேன்.
மெதுவாக தன் விரல்களை என் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டாள் என் காவிரிக் காதலி.
(வெகு நாட்களுக்குப் பிறகு கணுக்கால் அளவு காவிரியில் குளித்து முடித்து விட்டு எழுதியது)