“
இந்து என்று
சொல்வதில்
பெருமை கொள்வோம்”
“அல்லாஹ்
ஒருவனை தவிர
வேறு கடவுள் இல்லை”
“பாவிகளே
இயேசு கிறிஸ்துவை
விசுவாசியுங்கள்”
எல்லா மதங்களும்
அன்பைத்தான் போதிக்கிறதாம்.
முற்போக்கு முகாம்களில்
மத நல்லிணக்கக் கூட்டம்
சுயமரியாதை
எது அவலம்
கணவனை
காணவில்லை என்று
காவல் நிலையத்தில்
புகார்
செய்யச் சென்ற
பெண்ணை
போலிசார்
மாறி, மாறி
கற்பழித்தனர்.
–பத்திகைச் செய்தி
கற்பில் சிறந்தவள்
கண்ணகியா?
சீதையா?
தமிழ் அறிஞர்கள்
பேசிய பரபரப்பூட்டிய
பட்டிமன்றம்
கம்பனிடம்
கவிதை கரைபுரண்டு
ஓடியது,
உலகறிந்த விசயம்.
ஒட்டக்கூத்தனும்
சாதாரணமான
ஆள் கிடையாது.
அவுங்க ரெண்டு பேருக்கு
பிறகு
கவிதை
கன்னாபின்னான்னு
ஒடைச்சிக்கிட்டு
வந்தது
ஞானக்கூத்தனுக்குத்தான்
தெரியுமா?
மக்களுக்கு
கவிதை குறித்து
எந்த அறிவும்
கெடையாது.
கவிதை பற்றி
தெரியாத
முட்டாள் மக்கள்
தேர்தெடுத்த
அரசாங்கத்தோட
கவிதை உணர்வும்
‘0’ தானே
அதனால்தான்
ஞானக்கூத்தனுக்கும்
இந்த அரசுக்கு
மரியாதை செய்யத் தெரியல.
மன்னர்
ஆட்சிதாங்க சரி.
அவுங்கதான்
கவிதையை
மதிக்க தெரிஞ்சவங்க.
அப்படி
மன்னர்
அரியணையில்
வீற்றிருக்க
மன்னனை மகிழ்விக்கும்
உயர்ந்த கலைகளான
பரதநாட்டியம்
சாஸ்திரய சங்கிதம்
அது
முடிஞ்சதுக்கு
அப்புறமோ
முன்னமயோ
பசுவய்யா
ஞானக்கூத்தன்
இவங்களோட
மனம்
மகிழ வைக்கும்
நெகிழ வைக்கும்
கவிதைகள்…
மன்னன்
மகிழ்ச்சியின்
உச்சத்துக்கு சென்று
இவுங்களை
எப்படி உபசரிப்பான் தெரியுமா?
இவுங்க கவிதையின் வீச்சை
தாங்க முடியாம
இவுங்களுக்கு கால் அமுக்கி
விட்டாலும் விடுவான்.
மக்களோட
கழுத்தமுக்கினாலும்
கவிஞனோட
கால் அமுக்குறான்
பாருங்க
அவந்தாங்க மன்னன்.
ஆயிரம்தான் சொல்லுங்க
மன்னர் ஆட்சி
மன்னர் ஆட்சிதாங்க.
கவிஞன்
புல்லின்
நுனியில்
பனித்துளியில்
முகம் பார்த்தேன்.
ரோஜாவோடு
பேசினேன்.
செம்பருத்தி பூவில்
தேன் குடித்தேன்.
செவ்வரளி என்னோடு
கோபித்துக் கொண்டது.
வழக்கம்போல்
மல்லிகை என்னோடு
உறவு கொண்டது.
இன்று
என்னவாயிற்றோ
தெரியவில்லை.
என் பிரியமான
மனோரஞ்சிதம்
என் முகம் பார்க்க
மறுத்து விட்டது.
பூங்காவின் வாசலில்
ஒரே கூட்டம்.
யாரோ
மூன்று ஆண்கள்
ஒரு பெண்ணை
பலத்காரம்
செய்து விட்டார்களாம்.
என்ன அதிசயம்,
நான்
இருந்த இடத்திற்குப்
பக்கத்தில்தான்
இது நடந்திருக்கிறது.




