சிந்தனை எப்படி இருக்கவேண்டும் ? சிந்தனை எப்படி இருக்கவேண்டும்...
சிந்தனை எப்படி இருக்கவேண்டும் ?
சிந்தனை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.
செல்வத்திற்கும் செழிப்பிற்கும் பெயர் பெற்றது அந்த நாடு. அந்த நாட்டு மன்னனுக்கு அழகிய ஒரு மகள் இருந்தாள். பல சவால்களும், சோதனைகளும், ஆபத்துக்களும் நாட்டை சூழ்ந்திருக்கும் வேளையில், தனது மகளை தகுந்த ஒருவருக்கு மணமுடித்து அவனுக்கு பட்டம் சூட்ட விருப்பம் கொண்டான் மன்னன்.
முரசறிவித்து பல்வேறு போட்டிகள் வைத்து இறுதியில் மூவர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டனர். இவர்களில் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அது அவனுக்கு மிகவும் சவாலாக இருந்தது.
தனது நாட்டில் கானகத்தில் குருகுலம் அமைத்து சிறந்த முறையில் கல்வி போதித்து வரும் அந்த ஞானியை அணுகி விஷயத்தை சொல்லி, இவர்கள் மூவரில் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க உதவி புரிய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தான்.
மூவரும் சில நாட்கள் தன்னுடன் தங்கியிருக்கட்டும் என்றும் தனது முடிவை பின்னர் சொல்வதாகவும் சொன்னார் ஞானி.
மன்னர் தனக்கிட்டிருக்கும் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட அந்த ஞானி அசாத்திய தன்னம்பிக்கையும் நேர்மறை எண்ணமும் மிக்க ஒருவனே இளவரசியை மணந்து இந்த நாட்டை மன்னனுக்கு பிறகு வழிநடத்தவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டார்.
மூவருக்கு பல விஷயங்களில் சில காலம் பயிற்சியளித்தார்.
இறுதியாக, ஒரு நாள் மூவரையும் அழைத்து தனது உள்ளங்கையில் இருந்த ஒன்றை காட்டி “இது என்ன?” என்று கேட்டார்.
முதலாமவன், “இது ஏதோ ஒரு பழத்தின் கொட்டை!” என்றான்.
இரண்டாமவன், “இது ஒரு விருட்சத்தின் விதை!” என்று சற்று தெளிவாக சொன்னான்.
மூன்றாமவனோ, “குருவே! உங்களின் உள்ளங்கையில் ஒரு காடு இருக்கிறது!” என்றான்.
இளவரசியை மணந்து முடிசூடிக்கொண்டவன் அந்த மூன்றாமவனே என்பதை உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன?
மூவரிடமும் கேட்ட கேள்வி ஒன்று தான். ஆனால் அந்த பதிலும் உண்மை தான். ஆனால் அதில் தான் எத்தனை வித்தியாசம்!!
ஒவ்வொருவரும் சொன்ன பதில் குருவின் கையில் என்ன இருக்கிறது என்பதை விட அவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதையே சொன்னது.
இந்த மூன்றாமவனுக்கு இருக்கும் அதே மனநிலை தான் உங்கள் எல்லோருக்கும் இருக்கவேண்டும்!!!