மார்கழிப் பூக்கள் மலர் : 3 திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி...
மார்கழிப் பூக்கள்
மலர் : 3
திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி
மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாடு, இறை அன்பு, இறை இன்பம் பெறுவதற்குரிய மாதம் என்றே , சொல்லலாம். இரைக்கான தேடுதலைக் குறைத்துக்கொண்டு, இறை பணியில் சிறிதாவது ஈடு படவேண்டும் என்கின்ற உள்ளுணர்வு அனைவரையும் இனம் புரியாமல் தானே அழுத்தும். இல்லையா. ? வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது அது துவக்கத்தில் மெதுவான மிருதுவாக இருப்பதாக தெரியும். அதன் தன்மையை உணர்வதற்குள், அதி வேகமானதாகவும், உயிரையே ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள மெகா சுழியாக தன் தன்மையைக் காட்டிவிடுகிறது இல்லையா? அதுபோல மாயை என்னும் மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை, சிறிதளவேனும் உணர்வூட்டி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்ற பொன்னான வாசகத்தால் பொன்னார் மேனியனை துதிக்கவல்ல அளவுக்கு கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும். திருவெம்பாவை மூலம் மணிவாசகப் பெருமான் உலக மக்களுக்கு கூறும் அறிவுரை: இப்பாடல்களில் வரும் பெண்கள் என்ன செய்கிறார்கள் ? ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள். அவர்கள் தம் மனம் என்னும் இல்லம் தோறும் இறைவன் எழுந்தருளி இருப்பதால்இ எக்குறையும் இல்லதாவர்கள். இருப்பினும், ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதியைச் சுமக்கின்ற விசால மனமும், சிந்தையும் உடைய அப்பெண்டிர், இந்தப் பேரின்பப் பெருவுணர்வை அறியாமல், அவர்களோடு வாராமல் விடுபட்டுப் போன அக்கம்பக்கத்து தோழியர் கொண்டிருந்த உரக்க நிலை என்னும் மயக்கத்திலிருந்து விடுவித்து, அப்பெண்கள் உறுதி அற்ற நிலையையே கொண்டிருந்தாலும், தாம் தளர்வுறாது, இறைவன் மீது முழு ஈடுபாடுடன் கூடிய மனதாலும், தெளிவுமிகு பக்தியாலும், கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானைப் பாடுமாறு அப்பெண்களைத் தேற்றுகின்றனர். இதுவே, நமது இன்றைய தேவை. நாம் உய்யும் முறையை, , மிகுந்த உறுதியுடன் பற்றவேண்டும். அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் பேரின்பத்தை, நமது அண்டை அயலவர் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் கூவி அழைத்தும், இந்த உண்மையை அறியாதவருடைய வீடுகளுக்கே சென்று அவர்களது வாழ்க்கையையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி (சிவபுராண வரிகள்: மணிவாசகர்)