வளர்ச்சி…

எங்கள் வீடுகளையொட்டி
ஒரு வாய்க்கால்
ஒரு காலத்தில்
அதன் நீர்
எல்லோருக்கும்
பலவழிகளில்
பயன் பட்டது
நாங்கள் குழந்தைகள்
வாழை மட்டையில்
தெப்பம் செய்து
தெரிந்தவரை
அலங்கரித்து கயிறு கட்டி
படித்துறையில் இருந்தபடி
எட்டும் மட்டும் மிதக்கவிடுவோம் பின்
இழுத்துக் கொள்வோம்.
மறுபடி செல்ல அனுமதிப்போம்
மறுபடி.....மறுபடி
தெப்பம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைந்து
மட்டைகளாகி நீரோடு போகும்
மனமில்லாமல்
விளையாட்டைப் பிரிவோம்.
**** **** ****
இப்போது கெட்டுப் போய்
இழுப்பற்றுத் தேங்கிய நீரில்
குப்புற மிதக்கும்
என்புதோல்ப் பிணமொன்று
வீட்டருகே
ஒதுங்கி நிற்பதாய்ச் சொல்ல
கழியெடுத்துப் போய்
தள்ள்ளி விட்டோம்
எங்கள் எல்லையைத் தாண்டி
எங்கள் எல்லைக்குள் நின்று
தயாராய் இருந்தார்
அடுத்தடுத்த வீடுகளிலும்
அவரவர் கழிகளோடு.


கவிஞர் : கலாப்ரியா(21-Apr-12, 5:48 pm)
பார்வை : 31


பிரபல கவிஞர்கள்

மேலே