மெட்டியை விட சின்னது பூமி !

மிதித்து விட்டா போவது வழியில் அவள் பாதச் சுவடு !

பேருந்து கம்பியைத் தடவிப் பார்க்கிறேன் அவள் ரேகைத் தட்டுப்படுமா ?

இந்தச் செடிக்கு காதியில் வாங்கிய கெட்டித் தேன் ஊற்றலாம் அவள் தவறாமல் அதில் பூப்பறிக்கிறாள்!

அவள் வீட்டு வாசலைத் தோண்டினால் புதையல் நிச்சயம் அங்கே அவள் தினசரி கோலம் போடுகிறாளே !

இதோ அவள் மறந்து போன கைக்குட்டை …இல்லை கசங்கிய ஒரு துண்டு வானவில்!

உதட்டோரப் புன்முறுவல் அது ஐம்பெருங்காப்பியத்தின் ஆரம்ப விழா!

இரவில் விழுகிறதே வானவில் ஓ! அவள் உறக்கம் வராமல் மாடியில் உலவுகிறாளா ?

இந்தப் பூமிக்கு இவ்வளவு அழகாக ஓவியம் வரைய வருமா? அடடா..அது அவள் பாதத் தடமா ?

அவளிடம் சொல்லுங்கள் உனக்காக ஒருவனுக்கு அங்கே கண்கள் வழியாய் இதயம் ததும்பிக்கொண்டிருக்கிறதென்று !


கவிஞர் : பா.விஜய்(18-Jul-11, 11:54 am)
பார்வை : 1062


மேலே