மௌனமே வாழ்க்கையாய

தினம்தோறும் இருவரும்
திரும்பிப் பார்த்தும்
அறிமுகம் இல்லாதவராய்
வழி செல்லும் பயணம்

இதயம் மேடையிட்ட
காதல் கச்சேரிக்கு
சரிகமபதநி கூட
சரியாக உச்சரிக்கபடவில்லை

பூக்காத மொட்டுக்கு
கூந்தல் ஏற ஆசை
போகாத ஊருக்கு
வழித் தேடி தவிப்பு

சந்து முடுக்குகளில்
சங்கமித்த நம் காதல்
சமுத்திரமாய் விரிவதற்குள்
வற்றிய நீர் குளமாய்

அழகான குழந்தைக்கு
ஊனமாய் ஒரு கால்
ரசம் சொட்டும் கவியில்
நெருடலாய் சில பிழைகள்

முற்று பெறாத
முதல் வார்த்தைக்கு
அர்த்தம் மட்டும்
எப்படி கிடைக்கும்

ஓடாத கடிகாரத்தில்
மணிபார்த்த கதையாய்
உலா வந்த நம் காதல்
கல்லடிபட்ட கண்ணாடியாய்

விரிசலுக்குள் மறைந்த
என் காதல் பிம்பத்தை
விழிப் போட்டு தேடுகிறேன்
எட்டிய தூரத்தில் நீ இருந்தும்

எழுதியவர் : (30-Oct-09, 7:47 pm)
பார்வை : 2797

மேலே