உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே ...! (பொங்கல் கவிதை போட்டி )
காணிநிலம் வேண்டிய ஞானியே வாருமையா
கண்காணும் கழனியெல்லாம் கல்நாற்றுதானையா
கைநாட்டுகள் கட்டிக்காத்த வேளாண்மை
கணினியுகக் கட்டிடக் காட்டில்
பெண்டாட்டி பேச்சுக்கேட்டு தாயைத்
துரத்தி விட்ட கதை ஆயிற்றையா....!
சேறின்பால் ஏர்பிடிக்கும் எராளனை
ஏட்டுப்படிப்பு ஏளனம் செய்ய
நாட்டுப்புறப் பாட்டுப் படித்து
நவதானியம் விளையச் செய்த
நாயகனாம் உழவன் - இங்கு
நாண்டுக்கிட்டு சாகிறான் - பச்சைச்
சாயமிழந்த விவசாயம் விஷமாகிப்போனதையா ..!
ஐயா முண்டாசுக் கவிஞரே
போட்டி ஒன்று நடக்குது - உமது
எழுத்தாணியைக் கொஞ்சம் தாருமையா ...!
மாறி மாறி பொழியும் மாரி
அதனால் பயிரும் மரிக்குது - கண்டு
உழுத உயிரிங்கே துடிக்குது !
தலைப்பு ஒன்று கொடுத்தாக
அழைப்பு எனக்கு விடுத்தாக
உமது எழுத்தாணியால் எழுதுகிறேன்
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே
உலகும் மனிதனும் நரகத்தின் நடுவிலே !
இரண்டும் இங்கு ஒன்று அல்லோ ...!