விதி செய்வோம்

விதி செய்வோம்
(சிறுகதை)

'அய்யோ…என்னால முடியலையே…ப்ளீஸ்....என்னை வெளிய விடுங்க…நான் எங்காவது போயிடறேன்….இப்படி என்னைய அடைச்சு வெச்சுக் கொல்லறீங்களே…என்னால முடியலை…என்னால முடியலை…அய்யோ!” விஸ்வத்தின் ஆக்ரோஷமான அடித் தொண்டை அலறலில் அறைக்கு வெளியே ஷோபாவில் அமர்ந்திருந்த கீர்த்தனா நடுநடுங்கிப் போனாள்.

திடீரென்று விஸ்வம் அறைக்கதவை உடைத்து விடுவதைப் போல் பிசாசுத்தனமாய்த் தட்ட

'கடவுளே…நான் என்ன பண்ணுவேன்?...இந்த நேரம் பார்த்து அம்மாவும் அப்பாவும் வெளிய போயிட்டாங்களே!...இவனோட ஆவேசத்தைப் பார்த்தா கதவையே உடைத்தெடுத்து விடுவான் போலல்லவா இருக்கு!”

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போன தங்கள் மகன் விஸ்வத்தை டாக்டரின் அறிவுரைப்படி சிகிச்சைக்காக அறைக்குள் அடைத்து வைத்து விட்டு அதற்குக் காவலாய் தங்கள் மகள் கீர்த்தனாவை அமர வைத்து விட்டு டாக்டரைச் சந்தித்து வரச் சென்றிருந்தனர் அவனது பெற்றோர்.

'ஏய்…கீர்த்தனா!...ப்ளீஸ்…கதவைத் திறந்து விடுடி…ப்ளீஸ்….ப்ளீஸ்…!” தங்கையிடம் ஒரு பிச்சைக்காரனைப் போல் கெஞ்சினான்.

சில நிமிடங்களிலேயே அந்தக் கெஞ்சல் அழுகையாக மாறியது.

மெல்ல எழுந்து வந்து அவன் இருந்த அறையின் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தாள் கீர;த்தனா. தரையில் அமர்ந்து சிறு குழந்தையைப் போல் கையைக் காலை உதறிக் கொண்டு அண்ணன் அழுவதைப் பார்த்து பரிதாபப் பட்டது அந்தத் தங்கையின் மனசு. 'கடவுளே…நீதான் இவனைக் காப்பாத்தனும்….அந்தப் பாழும் போதைப் பழக்கத்திலிருந்து நீதான் இவனை மீட்டுத் தரணும்!”

ஜன்னலில் தெரிந்த தங்கையின் முகத்தைப் பார்த்ததும் அவன் அதிகமாய் அழ கீர்த்தனாவிற்கும் அழுகை தானாகவே வந்தது. தனக்காக அவள் கண்ணீர் சிந்துவதைக் கண்ட விஸ்வம் மெல்ல தன் கோரிக்கையை நாசூக்காக வைத்தான்.

'கீர்த்தனா…ப்ளீஸ்….எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா?” அவன் அழுதவாறே கேட்க

'ம்…சொல்லுண்ணா”

'அம்பது ரூபா எடுத்துக்கோ…நேரா பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல இருக்கற பெட்டிக்கடைக்குப் போ….அங்க…கடைல இஸ்மாயில்னு ஒருத்தன் இருப்பான்…அவன்கிட்ட என் பேரைச் சொல்லி அம்பது ரூபாயைக் கொடு….அவன் ஒரு பொட்டலம் தருவான் …அதை வாங்கிட்டு வந்து என் கிட்டக் குடு…சரியா?”

அவள் யோசனையாய்ப் பார்க்க சட்டென்று அவள் கைகளைப் பிடித்து கெஞ்சலானான் அவன்.

அவனது அந்தச் செயலில் மனமுருகிப் போன கீர்த்தனா உடனே புறப்பட்டாள்.

தங்கை வருவாள்…தனக்குப் பொட்டலம் தருவாள்….என்கிற எதிர்பார்;ப்புடன் ஜன்னலையே பார்;த்தபடி அறைக்குள் அமர்;ந்திருந்த விஸ்வம் தலைவிரி கோலமாய் கத்தியபடி ஓடி வந்த தங்கையைப் பார்த்து அதிர்ச்சியானான்.

'அய்யோ….அண்ணா….அண்ணா…” கத்தியவாறே ஷோபாவில் குப்புற விழுந்து குலுங்கியவளை ஏதும் புரியாமல் பார்த்தபடி நின்றான் விஸ்வம்.

அப்போது அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்த அவனது தாய் நேரே அந்த ஜன்னலுக்கு வந்து 'அடப்பாவி…நீயெல்லாம் ஒரு மனுசனா?....நீ கெட்டுத் தொலைஞ்சது போதாதுன்னு கூடப் பொறந்தவளையும் கெட்டுப் போக வெச்சிட்டியேடா”

பின்னாடியே வந்த அவனது தந்தை 'ஏண்டா அறிவு கெட்டவனே….அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வயசுப் பொண்ணை யாராச்சும் அனுப்புவாங்களாடா?...நீ என்னோட போதைக்காக உன் தங்கச்சிய அனுப்பினே…அவன் தன்னோட போதைக்காக அவளையே எடுத்துக்கிட்டான்!...அய்யோ…ஆண்டவா…இந்தக் கர்மத்தையெல்லாம் பார்க்கவா என்னை இன்னும் உசுரோட வெச்சிருக்கே?” மேலே பார்த்துக் கூவினார்.

அப்போதுதான் தன் தவறு விஸ்வத்திற்கு உறைத்தது. 'அடப்பாவமே…இஸ்மாயிலும்…அவனோட ஆட்களும் ரொம்ப ரொம்ப மோசமானவங்களாச்சே….அவங்க கைல என் தங்கைய நானே வாரிக் குடுத்துட்டேனே…! ச்சை…என்னோட இந்தப் பழக்கத்தினால குடும்பத்துல மத்தவங்களுக்கு எத்தனை பிரச்சினை…எத்தனை வேதனை…எத்தனை கவலை! இப்படியொரு பேரிழப்பு ஏற்பட்ட பிறகும் எனக்கு அந்தப் பழக்கம் தேவைதானா?”

மூலையில் அமர்;ந்து தீர;க்கமாய் யோசித்தவன் திடீரென்னு ஞானோதயம் ஏற்பட்டது போல் ‘விருட்‘டென எழுந்து ஜன்னலுக்கு வந்து 'அம்மா….கதவைத் திறங்க” என்றான்.

சற்று வித்தியாசமாக ஒலித்த அந்தக் குரலிலிருந்த கம்பீரமும் பொறுப்புணர்வும் அவன் தாயின் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த அவள் கணவனைப் பார்த்தாள்.

அவர் ‘சரி‘யெனத் தலையாட்ட கதவைத் திறந்து விட்டாள்.

வெளியே வந்த விஸ்வம் நேரே தங்கையிடம் சென்று அவள் தோளைத் தொட்டு 'என்னை மன்னிச்சுடு கீர்த்தனா…என்னாலதான்…என்னோட போதைப் பழக்கத்தினாலதான் உனக்கு இப்படியொரு களங்கம் ஏற்பட்டிடுச்சு…இப்பவே போய் அவனுகளை…..” பற்களை ‘நற…நற‘வென்றுகடித்தபடி வேகமாய் எழுந்தவனை அடக்கினாள் அவனுடைய தாய்.

'டேய்…டேய்…கொஞ்சம் பொறுமையாய் இருடா…நீ மறுபடியும் அங்க போய்…அவனுகளோட சண்டை போட்டு இந்த விஷயத்தைப் பெரிசாக்கினா…பாதிப்பு அவனுகளுக்கில்லை…நம்ம பொண்ணுக்குத்தான்..!...வேண்டாம்…இதை இத்தோட விட்டுடு…!...அவ விதிப்படி ஆகிறது ஆகட்டும்!...” சொல்லியவாறே கீh;த்தனாவின் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கி விஸ்வத்திடம் நீட்டி 'இந்தா உன் தேவை இதுதானே?..வாங்கிக்கோ…நீயாவது சந்தோஷமா…உன்னிஷ்டப்படி இரு” என்றாள்.

அந்தப் பொட்டலத்தை ‘வெடுக்‘கென்று வாங்கிய விஸ்வம் ஏதோ தொடக் கூடாத ஒரு பொருளைத் தொட்டு விட்டது போல துhர எறிந்து விட்டு 'இல்லைம்மா…இனிமே இந்தச் சனியனைத் தொடவே மாட்டேன்மா!...என் தங்கையோட வாழ்க்கையே சீரழியக் காரணமாயிருந்த இந்தப் பழக்கத்தை நான் இன்னையோட விட்டுட்டேன்மா…” ஆணித்தரமாய்ச் சொன்னான்.

அவன் கண்களில் அவன் உறுதியின் தீவிரம் நிமிர்ந்து நின்றது.

தாங்கள் நடத்திய நாடகத்தின் முடிவு ”சுபம்” என்றானதில் உள்ளுர மகிழ்ந்தன மூன்று உள்ளங்கள்.

(முற்றும்)

எழுதியவர் : முகில் தினகரன் (20-Jan-13, 2:37 pm)
பார்வை : 68

மேலே