1.கானலைத் தேடி..!-24.4.13-பொள்ளாச்சி அபி.!

இதனை வாசிக்க ஆவல்கொண்டு.[ ? ], இந்தப் பக்கத்திற்கு வந்துள்ள அனைவருக்கும் எனது வணக்கங்கள்..!.

இங்கே தொடங்கியிருப்பது ஒரு தொடர்.அது சிறுகதையோ..நாவலோ,கட்டுரையோ எனத் திட்டமில்லை.

இதற்கு முன்னரும் போகிறபோக்கில் என எழுதிய சில பதிவுகளைப் போலவே இதுவும் இருக்கும். ஆனால்,இது சில அத்தியாயங்களாக தொடரவும் செய்யும்.

போகிறபோக்கில்..,உங்களோடு சற்றுநேரம்-உங்களுக்கு நேரம் இருந்தால்- நாம் பேசிக் கொள்வதுபோல..சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே..!

இதில் வற்புறுத்தல் இல்லை.எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்.உனக்கு தெரிந்ததை நீ சொல்.. என்பது போல ஒரு சிறு பரிமாற்றம் மட்டுமே.

இங்கு பலருக்கும் பலவிதமான பணிச்சுமைகள் இருக்கிறது. நேரமின்மை காரணமாக,கருத்து சொல்லாமல் தவிர்த்து,தாண்டிச் செல்பவர்கள் மீதும் எனக்கு வருத்தமில்லை.

“பிரிவுகளை ஏற்படுத்தும் கருத்துக்களைவிட.., இணக்கத்தை ஏற்படுத்தும் மௌனங்கள் உயர்வானவை என்பது எனது எண்ணம்.!”

ஆனால்,ஒருவேளை உங்களுக்கு நேரம் இருந்து.., உங்கள் கருத்துக்கள் இதில் பதியப்பட்டால், எனக்குத் தெரிந்தவரை அதற்குப் பதில் சொல்வதும்,நன்றி சொல்வதும் எனது கடமை.!

அப்புறம்நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், இத் தொடரைப் பதிவு செய்யமுடியாத சிக்கலாக.. மின்வெட்டு..எனினும் முடிந்தவரை பதிவு செய்ய முயற்சிப்பேன்.

மதம், கடவுள் எனும் விவாதங்களில்..மாற்றுக் கருத்துக்களின் சங்கமமாக விளங்கும்,இத் தளம்.. எனக்குக் கொடுத்துள்ள இந்த இடம்.., அனைவருக்கும் பிடித்தமான களமாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆவல்..!

மீண்டும் பேசுவோம்..! அன்புடன் பொள்ளாச்சி அபி.!!

--------------------

1.கானலைத் தேடி..!-24.4.13-பொள்ளாச்சி அபி.!

எனது இருசக்கர வாகனம் பழுதாகிவிட்டது. அதனை சரிசெய்வதற்காக பட்டறையில் விட்டுவிட்டு வந்தேன்..கோவிலுக்கு செல்ல வேண்டும்,உனது வண்டியில் என்னை அதுவரை இறக்கி விட நேரம் இருக்கிறதா..? என்ற கேள்வியுடன் எனக்கு முன்னால் வந்து நின்றார் நண்பர் சிவலிங்கம்.

ஆன்மீகத்தில் மிகப்பற்றுடையவர் என்பதால், வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் அவர் கோவிலுக்கு செல்பவர் என்பது எனக்குத் தெரியும்.அதனால் தட்டிக் கழிக்காமல், அவருடன் கிளம்பினேன்.

கோவிலில் அவரை இறக்கிவிட்டவுடன், “சரி நண்பா..மிக்க நன்றி,உனக்கு ஏதேனும் வேலையிருந்தால் நீ செல்,திரும்பும்போது,ஒரு ஆட்டோ பிடித்து அல்லது பொடிநடையாய் வீட்டுக்கு சென்று விடுகிறேன்”என்றார்.

எனக்கு அன்று வார விடுமுறை என்பதால்,வேறு எதுவும் அவசர வேலைகள் இல்லை.நீ வரும் வரை நான் காத்திருக்கிறேன்.பொறுமையாகப் போய் வா..”என்று கூறி அவரை கோவிலுக்கு அனுப்பிவிட்டு,அருகில் உள்ள கடைக்கு சென்று தேநீர் அருந்த உட்கார்ந்து கொண்டேன்.அப்படியே அங்கே மேசைகளில் கிடந்த தினசரி செய்தித் தாள்களை பார்வையிட்டபோது,தமிழகத்தின் ஒரு பகுதியில் நடைபெற்ற சாதிக் கலவரமும்,அதனால் ஏற்பட்ட கொலைச்சம்பவம் ஒன்றும் தலைப்பு செய்திகளாக இடம் பெற்றிருந்தது.

நிதானமாகப் படித்துக் கொண்டிருந்தேன். சாதிக் கலவரத்திற்கு காரணமான இருபிரிவினரும், அவரவர் தரப்பு நியாயங்களை சொல்லி யிருந்தார்கள். ஆனால்,ஒவ்வொரு செய்தித்தாளும், அதன் உரிமையாளர் கொண்டிருந்த சாதி, மதச் சார்பு, கட்சி சார்பின் அடிப்படையில் செய்திகளைப் பதிவு செய்திருந்தன.

உண்மையான நிலவரம் என்பது குறித்து அவை பதிவு செய்திருந்த செய்திகளில் இருந்து உண்மையை அறிந்து கொள்ள முடியவில்லை.குழப்பமாக இருந்தது.

சிவலிங்கமும் கோவிலிருந்து திரும்பி விட்டார்.தரிசனம் முடிந்ததா..? டீ சாப்பிடறீங்களா..? என்று கேட்டபோது..வேண்டாமப்பா..வீட்டுக்குப் போய் டிபன் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றார்.

சரி கிளம்புவோம்..என்று வண்டியை ஸ்டார்ட் செய்தபோதுதான்..வேறு ஏதேனும் செய்தித் தாள்கள் நடுநிலையோடு செய்தி வெளியிட்டி ருக்குமா..? என்ற எண்ணம் தோன்ற வண்டியின் இஞ்சினை அணைத்தேன்.

"ஏனப்பா..,?" என்றார் நண்பர்.

ஒரு குறிப்பிட்ட செய்தித்தாளின் பெயரைச் சொல்லி,அதை வாங்கவேண்டும் என்றேன்.இரு நான் போய் வாங்கிவருகிறேன்..என்று எனது மறுமொழிக்கு காத்திராமல்,சென்று அந்த செய்தித்தாளை வாங்கி வந்து வண்டியில் அமர்ந்தார். கிளம்பினோம்.

என்னப்பா..இந்தப் பேப்பரில் விசேஷம்..? என்ற நண்பரின் கேள்விக்கு, சாதிக்கலவரம் குறித்த செய்திகளைச் சொன்னேன்.மேலும் அது சம்பந்தமான செய்தித்தாள்களின் நிலையையும் சொன்னேன்.

அவருக்கும் மிகக் கவலையாகப் போயிற்று. என்னதான் நடக்குது இந்த நாட்டிலே..? எப்பப் பார்த்தாலும் சாதிச் சண்டை,மதச்சண்டை வெட்டு குத்து..டெய்லி எங்காவது ஒரு இடத்திலே சின்னதும் பெருசுமா நடந்துட்டே இருக்கு.! அப்பப்பா..பொண்டு,பிள்ளைகளை வெளிய அனுப்பவே பயமா இருக்குப்பா..? என்ற அவரது குரலில் எரிச்சலும்,ஆதங்கமும் தெரிந்தது.

அவருடைய எண்ணங்களை ஆமோதிக்கும் நோக்கில்..,இதையெல்லாம் தவிர்க்கவே முடியாது..இதுபோல கலவரங்கள் நடக்கத்தான் செய்யும்.எப்ப நம்ம ஊரிலேயும் இப்படி வெடிக்குமோ..ன்னு நாம் பயந்துதான் ஆகணும்.அப்படித்தான் இருக்கு நிலைமை..!”

"இதுக்கெல்லாம் காரணமானவங்களை சுட்டுக் கொல்லணும்பா..”

அவரின் குரலில் வெளிப்பட்ட ஆத்திரம்..எனக்கு ஆச்சரியமாக இருந்தது.அரிசி மாவில்தான் கோலம் போடவேண்டும்.காகத்திற்கு சாப்பாடு வைத்து விட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்று சக உயிர்களின் நலனையும் கருத்தில்கொண்டு,தனது அன்றாட நடவடிக்கைகளை வகுத்துக் கொண்டிருப்பவர்,சக மனிதனை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று சொன்னால் ஆச்சரியம் வராதா.. என்ன.?.

யதார்த்த உலகம் ஏற்படுத்துகின்ற பிம்பம்.. எப்படிப்பட்ட மனிதரை எப்படி சிந்திக்க வைத்திருக்கிறது..? எனக்கு ஆச்சரியமும்,அதே சமயம் சிரிப்பும் வந்தது.

நீ சொல்ற மாதிரி சுட்டுக் கொல்லணும்னா.. எத்தனைபேரை சுட்டுக் கொல்றது..? நீங்க..மனிதர்களால் வெளிப்படுகிற காரியத்தை மட்டுமே பாக்கிறீங்க..? அதன் காரணத்தை பாக்கமாட்டேங்குறீங்க..! என்றேன்.

அதற்குள் வீட்டின் அருகே வந்து விட்டோம். வண்டியிலிருந்து இறங்கிக் கொண்ட சிவலிங்கம், “நீ எங்கேயும் போகலைன்னா..சாப்பிட்டவுடன் உங்க வீட்டுக்கு வர்றேன்..புதிதாக ஒரு புத்தகம் வாங்கிவந்தேன்.சில தத்துவங்கள் குறித்து விவாதிக்கணும்” என்றார்.

நானும் எனது தொடருக்காக எடுத்துவைத்திருந்த சில குறிப்புகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற்காக,வெளிவேலைகள் எதற்கும் திட்டமிட்டிருக்கவில்லை என்பதால்,சரி வாருங்கள்..என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.!
-----------------
மீண்டும் தொடர்வேன்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (24-Apr-13, 10:29 pm)
பார்வை : 126

சிறந்த கட்டுரைகள்

மேலே