கடுகுக்கதை (வீட்டுராசி)
அப்பா! புவனாவை இதுவரை பல மாப்பிள்ளைகள் வந்து பார்த்துப் போறாங்க. எதுவுமே முடியலியே! அதிகம் ரொக்கம், நகை கேட்கிறாங்க. என்னால் எப்படிப்பா செய்ய முடியும்?
சோகத்துடன் கேட்ட மகன் முத்துவிடம், ராமசாமி ஓர் உபாயம் சொன்னார்.
முத்து! அடுத்த தடவை புவனாவை பொண்ணு பார்க்க வர்றவங்களை என்னோட இந்த தோட்ட வீட்டுக்கு கூட்டிட்டு வா என்றார்.
அதே போல இரண்டு வாரம் கழித்து வந்த ஒரு மாப்பிள்ளை வீட்டாரை, தன் அப்பாவின் தோட்ட வீட்டில் வைத்து பெண் பார்க் வைத்தான் முத்து.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் முத்துவின் எஸ்டிமேட்டுக்கு உள்ளேயே நகை - ரொக்கம் கேட்டனர். மாப்பிள்ளை வீட்டார் சென்றதும் முத்து தன் தந்தையிடம் இதற்கு காரணம் ராசியா? என்று கேட்டான்.
முத்து! ராசி என்பது எல்லாம் ஒரு புறம். இப்போ நீ இருக்கிற வீடு புது வீடு. பளபளக்கும் தள வரிசை, கண் கவரும் வண்ணச் சுவர்கள், படாடோபமான ஃபர்னிச்சர் வகைகள் என்று இருக்கு! இந்த நம் தோட்ட வீடு ரொம்ப எளிமையா இருக்கு. ஓட்டு வீடு! இங்கே வந்து பேசுபவர்கள் இடம், பொருள் அறிஞ்சு பேசத்தானே முற்படுவாங்க! அதனால தான் இங்க வைச்சு பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணச் சொன்னேன்!
தந்தையின் அனுபவம் முத்துவுக்கும் பாடமாக அமைந்தது.
கு அருணாசலம்