ஆடையின்றி இரு நிலாக்கள்

ஏதாவது ஒரு
கோபத்தில்
மிதக்கும் நீர் குமிழியாகவே
இருக்கிறேன்...
சில போது....

யாராவது உடைக்கட்டும்
அல்லது,
உடைத்து விடக் கூடாது
என்பதில்
கோபமாகவே
தவிக்கிறேன்......

சட்டென வரும்
மழையில்
உருவமற்ற
வெளியாய் நனைகிறேன்....
நுகரும்
மண் வாசனையில்
மூளைக்குள்
பூக்கும் முட்களின்
முனையில்
எவளோ ஒருத்தியின்
ஈர இதழ்
வரி வரியாய் சிரிக்கிறது.....

ஒரு இரவை
நகர்த்த
எத்தனை காகிதங்கள்
வேண்டியிருக்கிறது .....

ஒரு காகிதத்தை
நிரப்ப
எத்தனை ஜென்மம்
கடக்க வேண்டியிருக்கிறது .....

ஜன்னலும் குளிரும்
பேசும் கதைகளில்
யாரோவாய்
கரைந்து போகிறேன்........

தூரத்து நிலவை
பந்தாடும் விழிகளில்
இரண்டு நிலாக்கள்
ஆடையின்றி
குளிப்பதாக
கனவு காண்கிறது
ஒரு ஏக்கம் .....
அது
எனதாகவே
இருக்கிறது.....

எழுதியவர் : கவிஜி (7-May-13, 12:30 pm)
பார்வை : 120

மேலே