தண்ணீர் தண்ணீர்! (கட்டுரை)

நீரின்றி அமையாது உலகு!
இது அனைவருக்கும் தெரிந்ததுதானே என்கிறீர்களா? ஆம்! தண்ணீரே கிடைக்காத ஒரு நாளை எண்ணிப் பாருங்கள்.என்னென்ன கஷ்டங்களெல்லாம் நினைவுக்கு வருகிறது?
இப்போதிருக்கும் நிலையே நீடித்தால் கூடியவிரைவில் அப்படி ஒரு நிலையை நாம் கட்டாயம் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாவோம் என்பதில் கடுகளவும் சந்தேகம் வேண்டாம்!
மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது கண்டிப்பாகத் தண்ணீருக்காகத்தான் வரும் என்று உலக வல்லுனர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
இப்போது நாம் செய்து கொண்டிருப்பது என்ன? ஒரு புறம் தண்ணீருக்காகக் காலிக் குடங்களுடன் அல்லாடி நெடுந்தொலைவு சென்று கொண்டுவரும் மக்கள்.மற்றொரு புறம் நல்ல தரமான அடுக்ககத்தில் வாழ்பவர்கள்.
உண்மையிலேயே தண்ணீருக்காகக் கஷ்டப் படுகின்ற மக்கள் நீரின் அருமை உணர்ந்து தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.ஐந்து குடம் நீர் இருந்தால் ஒரு நாளைப் போக்கிவிடுகின்றனர்.
நம்மால் முடியுமா? இதெல்லாம் நடக்கிற விஷயமா என்றுதானே யோசிக்கிறீர்கள்.வேறு வழியில்லையேல் சிக்கனமாக இருந்துதானே ஆக வேண்டும் அப்படி ஒரு கட்டாய நிலைக்கு நாம் ஆளாகத்தான் வேண்டுமா?
இப்போதிருக்கும் நீரை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் ? காலை எழுந்தவுடன் பல்விளக்கும் தூரிகையுடன் குழாயைத் திறக்கும் நாம் எப்படியும் பத்து நிமிடங்களாவது அந்தக் குழாயை மூடுகின்றோமா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.இந்த நேரத்தில் மட்டும் ஒவ்வொருவரும் வீணடிக்கும் தண்ணீரின் அளவு
வருடத்தில் ஏறக் குறைய ஐந்தாயிரம் லிட்டர்களாம்! என்ன மலைப்பாய் இருக்கிறதா?
இதே நீரை வாளியில் பிடித்து வைத்துப் பயன்படுத்தினால் இந்த வீணடிப்பு இருக்காதில்லையா?
குளிக்கச் செல்லும் நாம் நீர்த்தூவி(ஷவர்)யைத் திறந்துவிட்டு பொறுமையாய்க் குளிக்கிறோம்.இதனால் நாம் வீணடிக்கும் நீரின் அளவு வருடத்திற்கு இருபதாயிரம் லிட்டர்கள் இருக்கும் என்கிறார்கள்.இதையே வாளியில் பிடித்து வைத்துக் குளித்தால் ஒன்று அல்லது இரண்டு வாளிக்குள் குளித்துவிட முடியுமே.
சமீபத்தில் எங்கள் கோவை வாலிபர் ஒருவர் நீர் சிக்கனம் பற்றிய கருத்தரங்கில் வெறும் இரண்டு லிட்டர் தண்ணீரில் இரண்டு முறை சோப்புப் போட்டு சிக்கனமாகக் குளித்துக் காண்பித்தார்.
பார்த்த எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
இவ்வளவு நாட்களாக எவ்வளவு நீரை வீணடித்திருக்கிறோம் என்று எண்ணியபோது வெட்கமாக இருக்கிறது.
இப்போதெல்லாம் நான் தண்ணீரைப் பிடித்து வைத்துக் குளிக்க ஆரம்பித்து விட்டேன்.பல் துலக்கும் போது வாளியில் பிடித்துவைத்துக் கொண்டுதான் ஆரம்பிக்கிறேன்.
எப்போது பார்த்தாலும் நாட்டில் அது இல்லை,இது இல்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு இருக்கின்ற வளங்களை இப்போதே பாதுகாக்க ஆரம்பிப் போமா?

எழுதியவர் : கோவை ஆனந்த் (28-May-13, 11:20 am)
பார்வை : 10540

மேலே