சாதி என்றொரு சாத்தான்

* இருளும் ஒளியுமாய் அருளும் இறைவா...
நீ படைத்திட்ட மனிதனின் படைப்பில்
சாதி என்றொரு சாத்தான் உண்டு...

* செத்தப் பிணங்களை செரித்து வாழும் நாங்கள்
வெறும் சதைப் பிண்டமாய் அவன் கரம்
புகுந்தோம்...

* வேற்றுமை எனும் வேலிகள் பூட்டினோம்...
மனிதம் மறந்த மரக்கட்டைகளாகினோம்...
அரசியலெனும் நச்சு மரம் தழைத்தோங்க
சாதிச் சாக்கடையை அதன் வேர்
பாய்ச்சினோம்...

* உடல் கொடுத்தாய்...
உயிர் கொடுத்தாய்...
சிந்தனை செய்யும் திறம் கொடுத்தாய்....
ஆயினும் ஆக்க வழிகள் அனைத்தும் மறந்து
சவக்குழிகளை சரி செய்து கொண்டோம்...

* சாதி அரசியல் நடக்கும் இந்த சமூகத்தில்
வேடிக்கை பார்ப்பதை மட்டும் வேலையென
செய்தோம்....

* புற்றீசலாய் தினம் புதுப்புதுக் கட்சிகள்...
புதுப்புதுத் தலைவர்கள்....
சாதிச் சாயம் பூசிக் கொண்ட அவைகளின்
பின்னே சவங்களாய் கோஷம் எழுப்பினோம்...

* "சாதிகள் இல்லையடி பாப்பா"...
சாதிச் சான்றிதழ் சமர்ப்பித்த பின்னே
இந்த வரிகளை பள்ளியில் வாசித்து
முடித்தோம்...

* என்ன செய்வது...
அதிகாரம் கொண்ட அரசாங்கமே
சாதி அகழிகளை ஆதரிக்கும் பொழுது....

* பிரபஞ்சம் படைத்த இறைவா...
பிணியாய் எங்களை வதைக்கும்
பிரிவினைகள் களைவாயா...?

எழுதியவர் : ரமணி (7-Jun-13, 1:09 am)
பார்வை : 198

மேலே