முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
அறிமுகம்:
நண்பர் திரு.காளியப்பன் எசேக்கியல் அவர்களின் 'அன்றும்..இன்றும்...' என்ற குறுந்தொகை பாடல் 167 ம், அதன் தாக்கமான புதுக் கவிதையும் வாசித்தேன்.
நான் 'தீம்புளிப்பாகர் - தயிர்க் குழம்பு அல்லது மோர்க் குழம்பு' என்ற தலைப்பில் 'செந்தமிழ், தமிழ் மாருதம்' என்ற இரண்டு தமிழ் வார இதழ்களுக்கு அனுப்பி இருக்கும் கட்டுரை கீழே!
முக்கிய கட்டுரை:
செந்தமிழ் மே – 2013 இதழில் முனைவர் கோவை ச.கவிதா அவர்களின் ‘முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் – மொழிபெயர்ப்பும் சிக்கலும்’ என்ற கட்டுரையை வாசித்தேன். இதில்,
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
……………
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே – குறுந்தொகை பாடல் 167
என்ற கூடலூர் கிழார் எழுதிய குறுந்தொகையின் பாடல் எடுத்துக் காட்டாக கையாளப் பட்டிருக்கிறது. இதற்கு தமிழில் மொழிபெயர்ப்பில் சிக்கலின்றிப் பொருளுரை எழுதவும், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பாடலாகவும் எழுத முனைந்தேன். எனவே, முதலில் பாடலிலுள்ள சொற்களுக்கான பொருளை வலைத்தளத்தில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியிலும், தமிழ் க்யூப் என்ற தளத்திலும் தேடினேன்.
வலைத்தளத்தில் இப்பாடலையும், உரையையும் தேடியதில் ஒரு சிறு குறிப்பு கிடைத்தது. இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க கினியர் பார்ப்பானையும் பார்ப்பனியையும் தலைவன் தலைவியாகக் கூறியது எனக் கொண்டனர் என்றும், பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர் மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி (304-10) இங்கே ஆராய்தற்குரியது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
முற்றிய தயிரைப் பிசைந்து, தானே துழாவிச் சமைத்துத் தாளிதம் செய்த தீம்புளிப் பாகர் என்றும், புளிப்புச்சுவை மிக்கு இருந்திடாது அளவான இனிய புளிப்புத்தன்மை உடையதாலேயே தீம்புளிப்பாகு என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் புளியம்பழத் திலிருந்து பெறப்பட்ட பாகு அல்ல இது என்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால் இப்பாகு அல்லது குழம்பு எப்படியிருக்கும்? இதற்குப் பெயர்தான் என்ன?
இதற்கு எனது நெருங்கிய பார்ப்பன நண்பரைக் கேட்டேன். பின் என் மனைவியிடமும் இது பற்றிக் கேட்டேன். என்ன குழம்பு செய்யலாம் என முடிவெடுத்து, சமைக்க ஆரம்பிக்கும் முன்னாலேயே முளிதயிரை தயார் செய்யும் தீம்புளிப்பாகு என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். இது எங்கள் வீட்டில் வாரம் ஒருமுறை என் மனைவி செய்யும் சுவை மிக்க குழம்புதான் என அறிந்தேன்.
இப்பாடலில் செவிலித்தாய் தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த நற்றாயினிடத்தில், “தலைவி, தலைவன் மிக விரும்பி உண்ணும்படி சமையல் செய்து உண்பிக்கின்றாள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியதாக கூடலூர் கிழார் பாடியிருக்கிறார்.
இனி பாடலில் உள்ள அருஞ் சொற்களுக்குப் பொருள் பார்ப்போம்.
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.
என்று தலைவனும் தலைவியும் மணம் புரிந்து, இல்லறம் நடத்தும் மனை சென்று மீண்ட செவிலித் தாய் நற்றாய்க்கு உரைப்பதாக கூடலூர் கிழார் கூறுகிறார்.
பதவுரை:
முளிதயிர் – முற்றிய தயிர், ஓரிரண்டு நாட்கள் சேமித்து வைக்கப்பட்ட சற்றுப் புளிப்பான தயிர் (Curd with a little bit sour taste)
பிசை - மாவு, தயிர் முதலியவற்றைச் சிறிதாக நீர்விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல் (To squeeze or mash between the palms with the thumb and fingers in mixing)
காந்தள் மெல் விரல் - காந்தள் மலரைப் போன்ற மென்மையான விரல்
காந்தள் – வெண்மையும், செம்மையும் கலந்த மென்மையான மலர் (Malabar glory lily, red or white species)
குவளை மலர் - Indian water lily
கலிங்கம் - ஆடை, பட்டாடை (garment, Silk cloth)
கழுவுறு கலிங்கம் – துடைத்துக் கொண்ட பட்டாடை
உண்கண் - மை தீட்டப்பட்ட கண்கள்
குய் - தாளிப்பு (frying the spices and condiments with oil)
குய்ப்புகை - smoke with fine aroma due to frying
புகை கழும - புகை கண்களை மறைக்க
தான் துழந்து அட்ட - தானே துழாவிச் சமைத்த
தீம் புளி பாகர் - இனிமையான (புளி சேர்க்காத) புளிப்புச் சுவையுடைய தயிரில் தயாரிக்கப்பட்ட குழம்பு
இனிது என உண்டலின் - ‘இனிமை, இனிமை’ என்று சொல்லி கணவன் சாப்பிடும் பொழுது
ஒள்நுதல் முகன் நுண்ணிதின் மகிழ்ந்தன்று - ஒளி பொருந்திய நெற்றியும், முகமும் மிகவும் நுண்மையாக தன் மகிழ்வைக் காட்டியது.
பொருளுரை:
ஓரிரண்டு நாட்கள் முற்றிய சற்றுப்புளிப்பான தயிரை, தலைவி தனது காந்தள் மலர் போன்ற மென்மையான விரல்களால் பிசைந்து தயாரித்து, பட்டுத்துணியாலான தன் சேலை முந்தானையில் துடைத்துக் கொண்டாள். உடுத்திய அதே பட்டாடை யுடன், குழம்புக்குத் தேவையான தாளிதத்தினால் ஏற்பட்ட வாசமிகு புகை, மை தீட்டப்பட்ட கண்களை மறைக்க, தானே துழாவிச் சமைத்த இனிமையான புளி சேர்க்காத, புளிப்புச் சுவையுடைய தயிரில் தயாரிக்கப்பட்ட குழம்பை கணவனுக்கு இட்டாள்.
அதை கணவனும் ‘இனிமை, இனிமை’ என்று சொல்லிச் சாப்பிடும் பொழுது அவளது ஒளி பொருந்திய நெற்றியும், முகமும் மிகவும் நுண்மையாக தன் மகிழ்வைக் காட்டியது.
தீம்புளிப் பாகர் செய்முறை:
இது பெரும்பாலும் பார்ப்பனர்கள் மற்றும் சைவ முதலியார், பிள்ளை வகுப்பினர் வீடுகளிலும், சைவ உணவகங்களிலும் தயாரிக்கப்படுகிறது. நகைச் சுவையாக இதற்கு ‘சவாரிக் குழம்பு’ என்று இன்னொரு பெயரும் உண்டு. பொதுவாக விருந்தினர் வந்திருக்கும் நாட்களில் இக்குழம்பைச் செய்ய மாட்டார்கள். விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள்.
அதிக நாட்கள் விருந்தினர்களாகத் தங்கியிருக்கும் சந்தர்ப்பங்களில் இக்குழம்பு வைத்தால், ’வந்து நாட்களாகி விட்டது, கிளம்பு’ என்றும் பொருளாம். இதையும் பொருட்படுத்தாமல், உங்கள் வீட்டு தயிர்க் குழம்பு எனக்குப் பிடிக்கும் என்று தங்கி விடும் விடாக்கண்டர்களும் உண்டு.
இக்குழம்பு செய்ய முதலில் வேண்டிய அளவு அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இதனுடன் பச்சை மிளகாய், சீரகம், தேங்காயையும் சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்து, ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள சிறிது புளிப்பான தயிர் அல்லது கெட்டி மோருடன் கலக்க வேண்டும்.
இதை அடுப்பில் வைத்து, கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, நறுக்கப்பட்ட சின்ன வெங்காயம் ஆகியவற்றைத் தாளிதம் செய்து இதில் சேர்த்தும், நறுக்கி வேகவைத்த காய்களை இத்துடன் சேர்த்தும் சூடுபடுத்த வேண்டும். சிறிது மஞ்சள் தூளும் தூவிச் சேர்க்கலாம். சூட்டில் சிறிது நுரைத்து வரும் பொழுது அடுப்பைக் குறைத்து எடுத்துவிட வேண்டும். சுவையான தீம்புளிப்பாகுக் குழம்பு தயார்.
இக்குழம்பில் வேக வைத்த கத்தரி, சௌசௌ, அவரை, பூசணி, சுரை, வெண்டை, சேப்பங்கிழங்கு போன்ற காய்களையும், கடலைப் பருப்பில் செய்த வடை (பருப்பு வடை - உருண்டையாகவோ தட்டையாகவோ செய்து) ஆகியவற்றையும் சேர்த்துச் செய்யலாம்.
திருநெல்வேலி மாவட்டத் தைச் சேர்ந்த பிராமணக் குடும்பத்தினர் காய்கறி களை வேகவைக்கும் பொழுது சிறிதளவு புளிக்கரைசலையும் சேர்த்துச் செய்தால் சுவை கூடும் என்கின்றனர். சிலர் குழம்பைக் கொதித்து இறக்கியதும் சிறிதளவு எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து கொத்துமல்லித் தலைகளை தூவினால் சுவை கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
இக்குழம்பு தயிர்க் குழம்பு அல்லது மோர்க் குழம்பு என்றழைக்கப்படும்.
முடிவுரை:
மதிப்பிற்குரிய எம்.எல்.தங்கப்பா அவர்கள் முன்னுரையில், ‘My newly wed daughter fumbles with inexperience in her new home’ என்று விளக்குகிறார் என்பது பொருத்தமில்லை என உணர்கிறேன். தலைவிக்கு தாயார் திருமணத்திற்கு முன்பே சமையல் செய்யப் பயிற்சி கொடுத்திருக்கிறார் என்பதும், தலைவி தயாரித்த தீம்புளிப்பாகர் என்பது தயிர்க் குழம்பு அல்லது மோர்க்குழம்பே ஆகும் என்பதும் என் கருத்தாகும்.