"வாழ்க்கைத் தேன்"
உழைப்பின் மறுபெயர் "தேனீயே"
உன்உழைப்பை உலகோர் அறிவாரே
உலகோர் அறியும் உன்உழைப்பால்
உயர்ந்த தேனைப் பெறுவாயே
உழைப்பால் நீபெற்ற தேனைத்தான்
உலகோர் உன்னிடம் களவாட
உனது நிலைமை நான்கேட்க
உனக்கோ பெரிய வருத்தமிலை
தேனைத் திருடத் தெரிந்தவர்க்குத்
தேனைத் திரட்டத் தெரியாது
என்று நீதரும் விளக்கம்தான்
என்னுள் உன்னை உயர்த்தியது
உழைப்பால் தாம்பெரும் உயர்வேதாம்
உழைப்போர்க் கென்றும் பரிசாகும்
உழைத்துப் பெற்ற பரிசதுவே
உயரிய வாழ்க்கைத் தேனாகும்.