அதிகாலை நடைவழியில் .....!!
வீதி வழியெங்கும்
விருட்சத் தோரணங்கள்
குடை விரிக்கும் !
நாசி நுகர தூயவளி
சுவாசப் பை நிறைக்கும் !
நாடி நரம்பெங்கும்
புத்துணர்ச்சி பிறக்கும் !
ஆசி வழங்குமாற் போல்
மரமல்லி பூச்சொரியும் !
கிளை தெளிக்கும் பன்னீராய்
பனித்துளி வரவேற்கும் !
தவழ்ந்து வரும் தென்றலும்
சுகமாய் மேனி வருடும் !
கூவி புள்ளினமும்
பரவச ஒலி எழுப்பும் !
கீழ்வானில் செங்கதிரும்
பைய தலை தூக்கும் !
மலரும் அரும்பின் ஒலி
காதோரம் முத்தமிடும் !
புலரும் பொழுதின் ஒளி
பதமாய் இதமளிக்கும் !
தினம் காணும் காட்சியெனினும்
மனம் விழையும் தினம் காணவே !
அதிகாலை நாளும்
காலார நடை பயின்றால்...
அலுப்பெல்லாம் பறந்தோடும்
நோய்நொடியும் தொலைந்தோடும் ....!!