+நாணயமானவன்!+ (அ வேளாங்கண்ணி)

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி தோட்டத்தினில் மலர்ந்த சிறுமலராய் சீனு என்னும் ஓர் இளைஞனவன் சிற்றூராம் சீரணியில் வசிக்க, அவன் வாழ்க்கை ஓடமது பெறு உலகாம் கடல்தனிலே அலைகளாகிய துன்ப அசைவினில் சிக்காமல், சீரான வாழ்க்கையினை சிறப்பாக வாழ்ந்து வர, துன்பமின்றி துயரமின்றி வாழ்க்கை ஓடம் தான் ஓட, சிறு தென்றலாய் அவனுடன் புதிதாய் வேலைக்கு சேர்ந்த கனகன் என்பவன் அவன் நண்பனாகி, மெல்ல ஓடிய அதாவது சிறிய மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்க்கை ஓடமது, பெறு மகிழ்ச்சியாய் மாறி, மன அமைதி கொடுத்து, சிறு தென்றலின் மலர் அசைவினை போல மென்மையாக மாறி வாழ்க்கை ஓடமானது செல்ல, தாய், தந்தை அற்ற சீனு, சிறு ஏழைத்தொழிலாளியாய் இருந்து கொண்டு, பெரும் முதலாளியாம் சுந்தரத்தின் பையன் கனகனுடன் நண்பனாய் மாற, கனகன் காசு இருந்தும் உழைத்து உண்பதே பெருமை என்பதனை உணர்ந்தவனாய், அவன் உழைத்த காசினிலே இன்பமாய் வாழ்ந்துவர, நண்பர் இருவருமே நாளொரு ஜோக்கும், பொழுதொரு சிரிப்புமாய் அன்புடன் பழக, வஞ்சனையின்றி இருவ்ரும் பழகிவருவதைக்கண்ட கனகனின் சிநேகிதன் மாறன், சீனுவை வரச்சொல்லி அவனை மிரட்டி, கனகனாகிய என் நண்பனை விட்டு நீ பிரியாவிட்டால் உனக்கு நல்லதல்ல என்று கூற, சீனுவோ கனகனாகிய என் நண்பனை உயிர் போனாலும் பிரியமாட்டேன் என பதிலுரைக்க, மீண்டும் மாறன் சீனுவிடம், நீ காசுக்காகவே அவனிடம் பழகுகிறாய் எனக்கோபமாக கூற, பணத்தைப்பார்த்து உன்னைப்போல் பழகும் பழக்கமோ, உன்னுடைய கர்வமோ என்னிடம் துளியும் கிடையாது எனக்கூறி சீனு விர்ரென்று சென்றுவிட, விர்ரென்றும் சுர்ரென்றும் கோபம் கொண்ட மாறன், தன் காரினை எடுத்துக்கொண்டு கிளம்ப‌, வீடு செல்லும் வழியினிலே, அக்கோரக்காட்சியினை கண்டு, அவன் கண் தானாகவே கலங்க, வேகமாக சீறிப்பாய்ந்த லாரியின் கீழ் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவன் தந்தையை விரைவாக கொண்டு சென்று மருத்துவமனையிலே சேர்த்து, சிறிது நேரம் காத்திருந்து, உயிருக்கொன்றும் ஆபத்தில்லை எனத் தெரிந்துகொண்டு, மருந்து வாங்கி கொடுத்துவிட்டு தன் வீட்டிற்கு வரும் வழியிலே தன் நண்பன் கனகனைக்கண்டு விஷயத்தைக் கூற, அவன் மருத்துவமனைக்கு விரைய, மாறன் கனகனை விட்டு சீனுவை எப்படியாவது பிரிக்கவேண்டும் என யோசித்து வரும் போது, திடீரென்று உதித்த அந்த சதித்திட்டம், அவன் சோகமான மனதிற்கு சிறிது ஆறுதலாய் மாற, அவன் நினைத்த திட்டத்திற்கு அக்காலை பொழுதானது ஏற்றதாய் அமைய, கனகனின் தங்க மோதிரத்தை தெரியாமல் எடுத்து வைத்துக்கொண்டு ஏதும் தெரியாதது போல் மாறன் அமர்ந்திருக்க, வேகமாக தன்னை நோக்கி வந்த கனகனை நோக்கி என்னவென்று ஏதும் தெரியாதது போல் கேட்க, நேற்று காலை நான் உழைத்த காசிலே வாங்கிய புதிய தங்கமோதிரம் இன்று காணவில்லையே எனக்கூறி, கனகன் ஓவென்று அழுக, நான் நேற்றோரு காட்சி கண்டேன் என மாறன் கூறி, அவனது சதித்திட்டத்தை மெல்ல அரங்கேற்றத் தொடங்கிய அந்தவேளை, கரெக்ட்டாக சீனுவும் வர, கோபத்துடன் எழுந்த கனகன், 'பளார்' என்று சீனுவின் கன்னத்தில் தன் கையைப்பதிக்க, நிலைகுலைந்து விழுந்த சீனு தன்னை நிலைப்படுத்தி எழுவதற்குள், சீனுவின் சட்டையைப் பிடித்து தூக்கிய கனகன், எங்கேடா நீ திருடிய தங்கமோதிரம்? எனக் கேட்க, பதறிய சீனு, என்னது மோதிரத்தை நான் திருடினேனா? எனக்கேட்க, அருகிலிருந்த மாறன், பார்த்தியா நல்லா நடிக்கிறான் இவன் எனக்கூற, முற்றிலுமாக விஷயத்தை புரிந்து கொண்ட சீனு, தன் மீதே சந்தேகப்பட்ட ஆருயிர் நண்பன் கனகன் மீது பொங்கிய கோபத்துடன், என்னாடா சொன்ன? நான் திருடனா? இது தான் நம் நட்புக்கு நீ தரும் பரிசா? நான் உன்னோட பழகினதே தப்பு என்று கூறி நான் இனி உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன் என விருட்டென அந்த இடத்தை விட்டுப் பறந்து, அனாதைப் பறவையான சீனு, அந்த ஊரினை காலி செய்து,
பக்கத்து ஊருக்கு சென்று, அங்கேயே ஒரு வேலை தேடி, அவனுடைய சீரிய பணியினால் ஓரளவு நிலையான் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள, அவனும் அலுவலகம் செல்வதற்காக அன்று ஒரு புதிய மிதிவண்டி வாங்கி, மிக சந்தோசமாய் அதனை மிதித்துக்கொண்டு, பாட்டொன்று பாடியவாறே ஊர் முழுவதும் சுற்றி வந்து, பின் அவன் டீயொன்று குடிக்க எண்ணி, டீக்கடை பெஞ்சில் அமர, அதன் முன் பசை போட்டு ஒட்டியிருந்த 'நாளை ஒரு நாள் மாநிலம் முழுவதும் பந்த்' என்ற வாசகத்தினை படித்துக்கொண்டே, வாங்கிய டீயினை குடித்துக்கொண்டே, பந்தென்று சொல்லி நாட்டு மக்களை கஷ்டப்படுத்தி, வருகின்ற வருமானத்தை குறைத்து, செய்கின்ற வேலையினை செய்யவிடாமல், நாட்டுமக்களை வீட்டுக்குள்ளேயே முடங்கவைக்கும் பந்த் நாட்டுக்கு தேவையா? என யோசித்தவாறே தன் வீட்டினை அடைய, அடுத்த நாளும் பிறக்க, அங்கே, மாறனின் தந்தை, முன்பே விபத்தினில் மாட்டி, இரத்தத்தினை இழந்து, எமனின் வலையிலிருந்து தப்பியவர், மீண்டும் விபத்தினில் சிக்கி, சில நாட்களுக்கு முன் பல கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த மரணம், இன்று அருகிலே மையம் கொண்டிருந்ததால், மருத்துவர் மாறனை அணுகி, உங்க அப்பாவின் உடம்பிலிருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறி விட்டதால் அவரின் இரத்த குரூப்பான 'ஏ நெகவிவ்' உடனடியாக இன்னும் அரைமணி நேரத்திற்குள் எங்களுக்கு தேவை எனக்கூற, பயந்த தாயற்ற மாறன், தவியாய் தவித்தவனாய், நண்பன் கனகனைச் சந்தித்து, விஷயத்தைக்கூற, உடனே யோசித்த கனகன், ஆகா சீனுவின் இரத்த குரூப்பும் அதுவே என்று கூறி, உடனே அவனிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க வேண்டும் என விரைவாகச் சென்று, சீனுவின் அலுவலக மேலாளருக்கு போன் செய்து விஷயத்தைக் கூற, அன்று பாரத் பந்த்தானதால், அவர் எப்படியோ சீனுவிற்கு விஷயத்தை தெரிவிக்க, அவன் வேகமாகச் சென்று தன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு மிக வேகமாக மிதித்துச் செல்லும் போது, நடு ரோட்டில் கிடந்த ஓர் ஆணி முன் டயரில் ஏற, 'டப்' என்ற ஒலியுடன் வெடித்த அவன் சைக்கிள் ட்யூப்பினை கண்டு, அவன் நிலைகுலைந்து வேகமாக ஓடிச்செல்லலாம் எனக்கருதி, சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு மூச்சிரைக்க ஓடிவர, சீனு ஓடி வருவதை அறிந்த மாறன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு வர, சீனுவை அழைத்துக்கொண்டு கரெக்ட்டான நேரத்திற்கு ஆஸ்பெட்டலை அடைய, சீனுவிடம் இருந்து பெற்ற இரத்தத்தால் மாறனின் தந்தை உயிர்பிழைக்க, மாறன் தலை குனிந்தவனாய், நண்பா சீனு, நீ என்னை மன்னிக்க மாட்டாயா? எனக் கேட்க, என்னவென்று புரியாத கனகன் என்னவென்று கேட்க, அப்போது மாறன், உன்னுடைய மோதிரத்தை நான் தான் எடுத்து ஒழித்து வைத்துக்கொண்டேன் என்று கூற, அதைக்கேட்ட கனகன், அடப்பாவி! எனக்கூற, நான் உன்னை சீனுவிடம் பழகவிடாமல் தடுக்கவே அவ்வாறு செஞ்சேன், என்னை மன்னித்து விடு கனகா! எனக்கெஞ்ச, சீனுவின் கவரிங் கலக்காத தங்கமான அன்பினை புரிந்துகொள்ளாமல் அவனை அடித்து விட்டேனே, நான் அவனிடம் எப்படி பேசப்போகிறேன் என அஞ்சியவாரே கனகன் தவிக்க‌, கனகனைப்பார்த்த சீனு நான் அதை எப்பவோ மறந்துவிட்டேன் எனக்கூறி அனைவரின் மனத்தையும் மாற்ற, அப்போது மாறன் சீனுவைப்பார்த்து, நண்பா! உன்னிடம் பணமாகிய நாணயம் அதிகமாக இல்லாம இருந்தாலும், உங்கிட்ட நாணயம் நிறையவே இருக்கு, நீதான் என்றுமே 'நாணயமானவன்' என்று கூறி, நான் இனி பணத்தை பார்க்காமல் குணத்தைப் பார்த்துதான் பழகுவேன் எனக்கூற, அப்போது கனகன் விட்ட கண்ணீரானது, சீனுவின் இரத்தம் வடியும் காலை நனைக்க, நான் இறுதியாக வைக்கப்போகும் முற்றுப்புள்ளியையும் அழித்து அவர்கள் மூவருடைய ப்ரண்ட்ஷிப்பும் முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்தது.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Sep-13, 11:12 am)
பார்வை : 198

மேலே