வானமே எல்லை...! (Dheva.S)
சில கேள்விகள் பல புதிய திறப்புகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் விவாதத்தினூடே சில கேள்விகளை கேட்க...அது பற்றிய சில கருத்துக்களை நான் பகிர நேர்ந்தது. அங்கே பகிர்ந்ததை மீண்டும் பகிர்கிறேன்.....
ஆமாம்.. பகிர்தல்தானே வாழ்க்கை.... நண்பர்களே...!
நண்பர்:
=======
நாத்திகம் என்பது பகுத்தறிவு தொடர்பானது. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விசயம். கோயில் வழிபாட்டில் வர்ணாசிரம பாகுபாடு என்பது சமூக நீதி தொடர்பானது. இன்றும் பல ஊர்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதியில்லை. இவ்வாறான பாகுபாட்டில் தலையிட நாத்திகராக இருந்தாலும் அதில் தலையிட்டு சமூக நீதி காப்பதே அறம். இது பற்றி என்ன கூறுகிறீர்கள்.
நான்:
======
கடவுள் இருப்பு பற்றி பேசும் போது எல்லாம் ஏன் தோழர் நீங்கள் எல்லோரும் சமூக நீதிக்குள் வழுக்கி விழுந்து விடுகிறீர்கள்...? இங்கே கடவுள் பெயர் சொல்லி நிறைய கொடுமைகள் நடந்தேறி இருப்பதால் அப்படியான ஒரு பார்வைக்குள் வருவது உங்களுக்கு எல்லாம் வசதியாய் இருக்கிறது.
பகுத்தறிவு என்பது இருப்பதை ஏற்றுக் கொள்வது. இதுதான் ஆன்மீகத்தின் உச்சம். பகுத்தறிவு என்ற பெயரால் நீங்கள் மனிதர்களின் மூடநம்பிக்கையை ஒழித்ததைத்தான் அறிவின் உச்சமாய் கருதுகிறீர்கள். பகுத்தறிவு என்னும் போர்வைக்குள் நீங்களும் மட்டுப்பட்டுதான் போயிருக்கிறீர்கள். இது கடவுளின் பெயரால் நிகழ்த்தும் அட்டூழியங்களுக்குச் சரி சமமானது.
இந்தியாவில் சாதியைச் சொல்லி ஒடுக்கினார்கள். மேற்கத்திய நாடுகளிலும் இன்ன பிற பிரதேசங்களிலும் இனத்தின் பெயரால் ஒடுக்கினார்கள். அறிவு வலிமையாய் இருந்தவன் குறுக்கு புத்திகளால் சதி செய்து உடல் வலிமை கொண்டவனையும் அடக்கப் பார்த்தான். வலியது எளியதை அடக்க முயற்சித்துக் கொண்டேதானிருக்கும் இது இயல்பு. இந்த இயல்புப் பிறழ்ச்சி சாதி என்ற பெயரால் இந்தியாவில் தலை தூக்கியது. நீங்கள் 20 ஆம் நூற்றாண்டில் சாதியை, கடவுள் மறுப்பு என்ற பெயரில் செய்வதை நவீன அறிவின் உச்ச எல்லையாய்க் கருத்தி பெருமை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. ஆனால்..நீண்ட நெடுங்காலம் முன்பே.......
'சாதியாவதேதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே?!' (சிவவாக்கியர்)
.... என்று நாங்கள் ஆன்ம உச்சத்தின் வெளிச்சத்தால் அறியாமை இருளை விலக்கி இருக்கிறோம். நீங்கள் கடவுள் மறுப்பை பற்றி இனியும் பேசாதீர்கள்..., கடவுளின் பெயரில் நிகழும் அட்டூழியத்தை குற்றப்படுத்திக் கொண்டே நீங்கள் சரியான பகுத்தறிவு பாதையை தேர்ந்தெடுக்க மறந்து போகிறீர்கள்...!
ஒரு புரிதல் கொண்ட விழிப்புணர்வான ஆன்ம பலம் கொண்டவனால்தான் சமூகத்தை முழுமையாய் விழிப்படையச் செய்ய முடியும். விவேகானந்தர் அதைத்தான் செய்தார்.
சமூக நீதியைக் காத்தல்...........என்பது வேறு கடவுளை மறுத்தல் வேறு என்பதை அறிக தோழர்!
நண்பர்:
=======
இறை மறுப்பு (நாத்திகம்) கொள்கையுடையவர்கள், நான்கு வர்ண பாகுபாடு பற்றியும், சமூக, சாதீய ஒடுக்குமுறைகள் மற்றும் மனித சமத்துவத்தை பற்றி பேசக்கூடாதா ?!
நான்:
=====
நான்கு வர்ண பாகுபாடு பற்றியும், சமூக, சாதீய ஒடுக்குமுறைகள் மற்றும் மனித சமத்துவத்தை பற்றியும் நன்றாகப் பேசிக் கொள்ளுங்கள் அதில் ஒரு குற்றமும் இல்லை அது மிகச்சரியே...!
கடவுளை மறுக்கிறேன் என்று சொல்வதைக் கூட நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள் அதிலும் ஒரு பிரச்சினையும் இல்லை.. மாறாக கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை கேலிப் பொருளாக்க வேண்டாம் என்பது மட்டும்தான் நமது கருத்து.
நீங்கள் மறுக்கும் கடவுளை ஆன்ம புரிதல் கொண்ட நாங்களும் மறுக்கிறோம்....ஆனால் எதை ஏற்கிறோம் என்று அறியவேண்டுமானால் சொல்லுங்கள் உங்களின் அனுமதியோடு சொல்கிறேன்.
மற்றபடி உங்களுக்கு பூரண சுதந்திரம் இருக்கிறது உங்கள் கொள்கையில் இருந்து கொள்ள....அந்த சுதந்திரம் கடவுளை நம்புவர்களை எட்டிப் பிடித்து விமர்சிக்காத வரையில் நலம்.
* * * * *
என்று கூறி முடிக்க வேண்டியதாயிற்று. கேள்விகளும், பதில்களும் மட்டுமே நம்மை இறுதி உண்மைக்கு கூட்டிச் சென்றுவிடாது என்றாலும்.....கேட்டு கேட்டு எல்லாம் மறந்து போகும் தினமொன்றில்...சித்தார்த்தர்கள்...புத்தனாகிப் போகிறார்கள்...!
வாழிய நலம்....!!!!!
தேவா சுப்பையா...