தேவதைகள் வந்துபோன தேசம்...!

எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!
வந்தவர்கள்... வரம் கொடுக்க வரவில்லை...!
வாங்க வந்தார்கள்!!
தேவதைகளுக்கும் தேவை அதிகம்
தேவையில்லாமல் தேடி வந்தார்கள்!
அழைக்காமலேயே அன்பாய்(?) வந்தார்கள்!

வந்துபோய்... எம்மிடம்
மிச்சம் மீதியாய் இருந்ததையும்
அழிக்காமல் விட்டிருக்கலாம்...!!!
வரம் கொடுப்பதாய் சொல்லிக்கொண்டு
காட்சிதரும் தேவதைகளே!
பாவம் நாங்கள்...
சாபங்களை அள்ளியிறைத்துவிட்டுப் போகாதீர்கள்!!

போர் என்றும் சமாதானமென்றும்
போர்க்குற்றமென்றும் விசாரணையென்றும்
தீர்வென்றும் தீர்மானமென்றும்
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்!
எதுவுமே நடக்கவில்லை!

சாவின் விளிம்பில் நின்று கதறியபோது
சாப்பிட ஏதுமின்றி திணறியபோது
செல்வீச்சில் சின்னாபின்னமாய் சிதறியபோது
உறவுகளை பறிகொடுத்து பதறியபோது
உலகெங்கும் கேட்கத்தானே கூவியழைத்தோம்!
எங்கே போயிருந்தீர்கள்???
தேவதைகளே... உங்களைத்தான் கேட்கின்றோம்!
எங்கே போயிருந்தீர்கள்???

தோன்றுவதும் மறைவதும்
தோண்டுவதும் மறைப்பதும்
வருவதும் போவதும்
வரம் கொடுப்பதும் கொடுக்காததும்
எதைப்பற்றியும்...
இப்பொழுது நாம் நம்புவதில்லை... கவலைப்படுவதுமில்லை!
ஏனெனில்..
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!


இன்னும் எத்தனை தேவதைகள் வருவார்கள்?!
வரட்டும்... வரமோ சாபமோ
கொடுக்கட்டும்!!!
எதைப்பற்றியும் கவலையில்லை...!!!
ஏனெனில்,
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!
இதுவும் அப்படித்தான் !!!

#ஐநா மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை அம்மையாரின் இலங்கை விஜயம்#

எழுதியவர் : ஒருவன் கவிதை (9-Sep-13, 7:02 pm)
சேர்த்தது : ஒருவன்
பார்வை : 86

மேலே