கலியுக ராகங்கள்-கே.எஸ்.கலை

அசைக்க முடியாத அரியாசனம்
யாருக்கும் தரவில்லை பிரயோசனம்
வாழ்வதற்கு ஊரில்லை
வாய்களுக்கு சோறில்லை
காரணமாய் இருப்பது “அறியா”சனம் !
¸.•✿⊱╮
பதவிமேல் அவன்கொண்ட பரிவால்
பணத்தோடு கொண்டுவந்தான் அரிவாள்
பெற்றான் வேலை
தோற்றான் ஏழை
ஆகாது இங்கெதுவும் அறிவால் !
¸.•✿⊱╮
உள்ளவருக்கு மகிழ்ச்சி முக்காலம்
ஊதுகிறார்கள் அதனால் எக்காளம்
சிலைக்கோ பால்
அவரறிவோ பாழ்
உயிர்பெறுவது இவரறிவு எக்காலம் ?
¸.•✿⊱╮
காரிகைகள் வருவார்கள் மைப்பூசி
வாலிபர்கள் சிரிப்பார்கள் பொய்பேசி
குழந்தையோ கருவில்
வாழ்க்கையோ தெருவில்
காரணமாய் இருப்பதோ கைப்பேசி !
¸.•✿⊱╮
வனப்பான வார்த்தைகளின் மாயம்
அரும்பியது விடலையரின் காயம்
ஆடினார்கள் கூடலில்
ஓடினார்கள் ஊடலில்
கலியுகத்தில் இஃதெல்லாம் நியாயம் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (14-Oct-13, 11:08 pm)
பார்வை : 232

மேலே