இறைஞ்சுகிறேன் இறைவா உன்னை...

அன்னையின் மடியில் இருந்தாய்
ஆதவனின் ஒளியாய் ஒளிர்ந்தாய்
இயற்கை வனப்பில் நிறைந்தாய்
ஈவோரின் கரத்தில் உறைந்தாய்
உயிர்களின் நாதமும் நீயே
உலகெங்கும் நிறைந்து நின்றாயே

ஒப்பாரும் மிக்காரும் இல்லா
ஓர் பெரும் தலைவனும் நீயே
ஓம் எனும் மந்திரம் கூறும்
ஔடதமும் நீயே இறைவா

உணர்வோடு உறைபவன் நீயே-எம்
உதிரத்தில் கலந்து நின்றாயே
உடல் மட்டுமே இங்கு நானல்லவா
உயிர் என்பது என்றும் நீயல்லவா இறைவா

அழுகின்ற மனங்களுக்கெல்லாம்
அமைதியைக் கொடுப்பவன் நீயே
அழித்திட வருவோர்க்கெல்லாம்
அழிவினை தருபவன் நீயே

சண்டைகள் இங்கு வேண்டாம்
சாந்தி எங்கும் பரவிடல் வேண்டும்
சுழலும் நம் பூமியில் நின்று
சூதுகள் அகன்றிட வேண்டும்

இறைஞ்சுகிறேன் இறைவா உன்னை
இருளிலிருந்து மீட்பாய் எம்மை
பிள்ளைகள் நாங்கள் செய்த
பிழைகளை பொறுத்தருள்வாயே

கருணைக் கடலும் நீயே-எமை
காப்பதும் உந்தன் கடனே
அகந்தையை அழித்து எம்மை
அருள் கூர்ந்து காத்திடுவாயே

எழுதியவர் : டினேஷ்சாந்த் (15-Oct-13, 3:50 pm)
பார்வை : 538

மேலே