@@@ கொலையா? தற்கொலையா?@@@

வந்து பிறந்த நாள்முதல்
வளர்ந்த நாட்களெல்லாம்
வறுமையில் கழிகிறது
வலியோடு வாழ்வின்வழி
வழுக்கிப் போகவே
வாழவேண்டாமென
வாழ்வை முடிக்க வந்தாயோ தற்கொலைக்கு ?

உயிரின் உயிராகி
உணர்வில் உள்புகுந்து
உன்னுள் நுழைந்தவள்
உன்னவள் இல்லையென
உதறித்தள்ளி உதாசித்து
உன்னைவிட்டு போனாளென
உயிரைவிட வந்தாயோ தற்கொலைக்கு ?

தாய் விட்டுப்போனாள் அனாதையாய்
தந்தை ஓடிப்போனான் யாரோடோ
தரணியில் வாழும் மக்களின்
தரங்கெட்ட வார்த்தைகள்
தங்கமான உன் எண்ணங்களை
தகரமாக எடைபோட வேண்டாமென
தாய்சென்ற இடந்தேடி வந்தாயோ தற்கொலைக்கு?

பள்ளியிலே முதலிடம்
பரிசுகளும் பலப்பெற்று
பட்டமெல்லாமும் பதக்கத்தோடு
படித்து பட்டதாரியாய்
படிப்புக்கள் உன்பெயரை அலங்கரிக்க
பசிப்போக்க முடியா நிலையில்
பழிதீர்க்க வந்தாயோ தற்கொலைக்கு ?

தொட்டதெல்லாம் தோல்வியாகிறது
தொலைந்துப்போனது என் வாழ்வாகியது
தொடரும் விரக்தியும் வேதனையும்
தொல்லைகளாய் குவிந்த வண்ணம்
தொடர்ந்து வாழவிடாமல் விரட்டிட
தொங்கிவிடலாமென துணிந்து வந்தாயோ ?

சிறுநிமிடம் சிந்திப்பயோ
சிறப்பான உன் சிந்தைக்கொண்டு
சிறிது நேரத்தில் போகும் உன்உயிரால்
சிரமமென்று நீ நினைத்தவை மாறிடுமா?
சீ கோழை என்று உன்னை ஏசிடுமா?
சிறப்பான அழகிய வாழ்வினை
சிதைத்து சிரமத்திற்கு ஆளாகாதே

வாழ்வதற்கு ஆசைக்கொண்டு
வாழ்வை வரவேற்றிடு
வழிகள் உதித்திடும் பலவென்று
வலியோடு இருந்தாலும்
வாழ்வில் நல்வழியை தேர்ந்தெடு
வாழ்வின் வசந்தங்களை ரசித்திடு
வரலாற்றில் உன் பெயரை பதித்திடு

இனி உன் முடிவு உன் கையில்
இனி தற்கொலை செய்வாயோ
இல்லை தற்கொலை எண்ணத்தை
இல்லாது கொலை செய்வாயோ
இடித்துக்கூறு இக்கணமே
இனி கொலையா? தற்கொலையா?

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (19-Oct-13, 10:35 am)
பார்வை : 88

மேலே