வர வர மாமியார் ...
நான் முழுவதையும் சொல்லிடும் முன்பே நீங்கள் நினைத்து விட்டீர்கள் .. நான் என்ன சொல்லப் போகிறேன் என்று. சரிதான். பாதி சரி. பாதி தவறு.
"வர வர மாமியார் கழுதை போல் ஆனாராம்".
ஆம். இது ஒரு பழமொழி. உங்களுக்கு தெரியும். மாமியார் மீது கோபம் வந்துவிட்டால் போதும். உடனே, இந்த பழமொழி பிரயோகித்து விடுவார்கள்.
ஐயிரு திங்கள் அடிவயிற்றில் சுமந்து, அவர் பெற்ற மகளை, நம் கையில் கொடுத்ததிற்கு, நம் வீட்டில் விளக்கேற்றி வைக்க ஒரு மகளை தந்த, அவரை .. அதாவது நம் மாமியாரை .. ஒரு விலங்கின் பெயர் இணைத்து ஒப்பிட்டு கூறுதல் சரியாமோ ?
சரியா .. தவறா .. என்பதை உணர, மீண்டும் ஒரு முறை உங்களை சங்க காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். வாருங்கள்.
புற்களில் இரு வகை. ஒன்று கற்பூரப்புல். கற்பூர வாசனை உள்ளதால் அதற்கு அப்பெயர். மற்றொரு வகைப்புல். கோரை எனப்படுவது. கோரைபுல்லிற்கு "கழு" என்ற பெயரும் இருந்தது.
சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் மட்டுமே பயன்படுத்தினார்களாம்.
கற்பூரப்புல் கொண்டு தயாரிக்கப்படும் பாய்களில் கற்பூர மணம் இருக்குமாம். கழுப்புல் பாய்களில் மணம் இருக்குமா?
கழுதை என்ற சொல்லினை பிரித்திடின் கழு + தை என்று வரும். ஒருவேளை அவர்கள் கோரைப்புற்களால் நெய்யப்பட்ட பாய்களை கழுதை என்றும் குறிப்பிட்டிருக்கலாம் என்று என் கருத்து.
பல்லாண்டு காலமாக பலராலும் கையாளப்படும் இந்த பழமொழி ஒரு சிலேடை ஆகும். இதற்கு இரு பொருள் கொள்ளலாம். ஒன்று .. மாமியாரை விலங்குடன் ஒப்பிட்டு திட்டுவது போல் திட்டுவது. மற்றொன்று .. உழைத்து உழைத்து, உடல் மெலிந்து, தோல் சுருங்கி, கண் பார்வை மங்கி, மேனி பொலிவிழந்து இருக்கும் வேளையிலே .. கோரைபுர்களினால் நெய்தபாய் (கழுதை .. என்று பொருள் கொள்க ) மாமியாரும் தேய்ந்து நொடிந்து விட்டாள் என்றும் பொருள் கொள்வீர்.
காலம் செய்த கோலத்தால், வேறு ஒரு பொருள் கொண்டு விட்டோம்.
போகட்டும். இந்த பழமொழியை ஒரு வேளை நம் விகடகவி காளமேகப்புலவர் கொடுத்திருப்பாரோ .. !!