தேயிலை
பார்க்கும் கண்கள் எதற்கும் என்றும்
==பசுமை வார்க்கும் தேயிலை
பார்த்து பார்த்து வளர்ப்பவன் வாழ்வில்
==பசுமை வார்ப்ப தேயிலை
ஈர்க்கும் அழகை வைத்தே இருக்கும்
==இயற்கை பூவனம் தேயிலை
யார்க்கும் மனதில் உற்சா கத்தை
==யாசகம் போடும் தேயிலை
அடிமை கால வாழ்விற் கன்று
==அடிக்கல் நாட்டிய தேயிலை
மிடியைத் தீர்க்கும் வழியை காட்ட
==மறந்து போன தேயிலை.
காடாய் இருந்த மலைகள் எங்கும்
==கால்கள் ஊன்றிய தேயிலை
மாடாய் உழைத்து மாண்ட பரம்பரை
==மாற்றிட மறுத்த தேயிலை
நாடாய் இருக்க காடுகள் எங்கும்
==நல்வழி அமைத்த தேயிலை
வீடாய் லயங்கள் என்னும் குடிசை
==விதைத்து விட்டத் தேயிலை
கடலது தாண்டி இலங்கை வந்தோர்
==கண்ணாய் வளர்த்த தேயிலை
உடல்வளம் என்னும் உழைப்பத னாலே
==உயர்த்தி விட்ட தேயிலை
கள்ளத் தோணி என்றே அழைக்க
==காரணம் ஆகியத் தேயிலை
உள்ளம் இருக்கும் ஏழை வாழ்வை
==ஊமை ஆக்கியத் தேயிலை
சொல்லச் சொல்லச் சோகம் தீரா
==சோதனைக் கொடுத்த தேயிலை
செல்வர் வாழ எம்மவர் இன்னும்
==சிந்திடும் உதிரமே தேயிலை