விந்தைக் கலை

மாதிரி வகுப்பு நடத்திடும் வாய்ப்பு
அப்பு சாமிக்கும் கிடைத்து ஒருநாள்.
“விந்தைக் கலை”பற்றி சொற்பொழி வாற்றிட
விரைந்து சென்றார் மேடையை நோக்கி.
ஆபாசம் கேளிக்கை அடங்கிய படமொன்றின்
பிரதியை ஆளுக்(கு) ஒன்று கையில் கொடுத்தார்.
விரிவுரை கொடுக்கையில் படத்தின் விளக்கத்தை
இளநகையுடனே முழக்கம் இட்டார்.
“ஆபாசம் எல்லாம் ஆபாசம் அல்ல;
கேளிக்கை யெல்லாம் கேளிக்கை யல்ல.
ஆபாசம் கேளிக்கை இரண்டையும் கலந்தால்
அதில் எழுவதுவே ’விந்தைக் கலை’யாம்
அதை விளக்கிடவே உம்முன் தோன்றினேன்
அழகிய முறையில் என்பணி முடித்தேன்.
கலையுணர் வுள்ளவர் புரிந்திருப்பீர்கள்.
புரியா தவர்பற்றி நான்என்ன சொல்ல!
பாவம் உங்கள் நிலையை நினைத்தால்!
நம்பிக்கை இருப்பவர் என்னிடம் வாருங்கள்
‘விந்தைக் கலை’யைக் கற்றுக் கொள்ளவே!”

தன்னுரை முடிந்ததும் தலையை நீட்டி
வகுப்பில் உள்ளோரை நோட்டம் விட்டார்.
அனைவரும் பேச்சிப் சிரிப்பில் மூழ்கி
அப்புரை கேளாது தப்பி யிருந்தனர்.
அதற்குக் காரணம் அவர்தந்த படமே.
அதனால் எவரும் கைதட்ட வில்லை;
பாராட்டி இன்றி இருக்கைகுச் செல்ல
அப்புவின் மனமோ ஒப்ப வில்லை.
எனவே தன்கை சிவக்கும் வரைக்கும்
தட்டி ஓய்ந்தபின் இருக்கையில் அமர்ந்தார்.
(1991)

(1991 ஆம் ஹைதராபாத்தில் CIEFL – ல் பேராசிரியர்களுக்கான பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட பேராசிரியர் ஒருவர் பாக்கியம் ராமசாமி படைத்த அப்புசாமி என்ற கதாபாத்திரம் போலவே தோற்றத்தில் இருந்தார். அவர் Grotesque என்ற தலைப்பிட்ட படமொன்றின் பிரதியை கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் கொடுத்தார். இதுவே நடந்தது. மற்ற அனைத்தும் கற்பனை.)

எழுதியவர் : இரா, சுவாமிநாதன் (15-Nov-13, 5:09 pm)
பார்வை : 287

மேலே