தூரத்து தென்றல்

மழைக்காலத்தில்
மகிழ்வோடு சுற்றித்திரியும்
பட்டாம் பூச்சிகளாய்
வலம் வந்த வசந்தக்காலம் .
ஆற்றங்கரையில் அழுக்குபோக்க
அள்ளிப்பூசிய இயற்கைசாம்பு .
அறியா பருவத்தில்
அவளளித்த அன்பு முத்தம்
ஆனந்த பரிசம் .
ஆடிக்கொருநாள்
ஆட்டுரலில் மாவரைத்து
அம்மா இட்ட இட்டிலி .
எனது இல்லத்தில்
அறிவியல் வளர்ச்சியால்
அழிந்த பொருட்கள் ஏராளம்
அம்மா அரைத்த ஆட்டுரல்
அசைந்து இழுக்கும் அமிக்கல்
அடித்துத் துவைக்கும் துணிக்கல்
அனைத்தும் இன்று துறவுக்கோலம் .
பள்ளிக்கு செல்ல பயந்து
பாசத்தாயிடம் பக்குவமாய்
உரைத்தப்பொய்கள் .
வீட்டிற்கு ஒரு கைப்பிடி
அரிசி அள்ளி
மழை நண்டை மண்டியிட்டு
அதனோடு சண்டையிட்டு
மண்பானையில் மசாலை சேர்த்து
கூட்டமாய் சமைத்துண்ட
கூதிர்க்கால கூட்டச் சோறு .
பெட்டி கடைதனில்
திருவிழா வரவிற்கு
பத்து பைசா சீட்டுப்போட்டு
பத்து முறை எண்ணிப்பார்த்து
அகம் குளிர்ந்த மழலைப் பருவம் .
ஊரோரம் ஒரு புளியமரம்
அம்மரத்திற்கு அரைக்கால் டவுசருடன்
காவலாளி கண் மறைந்து
காயைக்கல்லால் கொய்து
உள்ளங்கை உப்புடன்
உண்ணும் தருணத்தில்
புளிப்பு சுவை உச்சியேறும்.
அம்மா அப்பா விளையாட்டில்
அவள் செய்த மண் சோறு
செங்கல் பொடி சாம்பாரு
மண் மூடி போயிற்று .
சிறு வயதில் விளையாடிய
சில்லாக்கு ,கிட்டுப்பிள்ளை
மரக்கபாடி இவையனைத்தும்
மழையில் இட்ட கோலமாய்
மறைந்தனவோ ?
ஓடக்கரையோரம்
ஒன்பது ஏக்கர் தோட்டம்
மணக்கும் எலும்பிச்சை
இனிக்கும் கரும்பு
தலையசைக்கும் நெற்கதிர்
முக்கனிகளில் ஒன்றுவிட
மா ,வாழையென ................
அவ்விடத்தே
குயில்களின் குரல்
மயில்கள் நடனம்
மன மகிழ்ச்சி தரும்
குறுங்காது முயல்கள்
நெற்பயிரிடையே தாவும் .
அவ்வழகு சோலை
அடியோடு அழிந்து
இப்போது (கல்மண்டபம் )
என்னை தழுவி தாலாட்டிய
தென்றல் இன்று
தூரத்துத் தென்றலாய் .............................





இளையகவி

எழுதியவர் : கா .இளையராஜா .பரமக்குடி (20-Nov-13, 2:12 pm)
பார்வை : 148

மேலே