நான் ரசித்த கவிதை 1 அஹமது அலி கல்பனா பாரதி

"சிலந்தியிடம் சில கேள்விகள்" -(அஹமது அலி)
சிறு பிள்ளைகள்
எச்சில் தொட்டு
காகித வீடு செய்வது
சிறுபிள்ளைத் தனமாகா...
சிலந்திகளின்
ஒரு வித திரவம்
சிலந்தி வலை ஆகும் போது.!
ஏய் சிலந்திகளே!
நீங்கள் எந்த
பொறியியற் கல்லூரி
சென்று படித்தீர்கள்?
நன்கொடை
கேட்டார்களா?
அந்தரத்தில்
எப்படி அழகு வீட்டை
நிர்மாணிக்கிறீர்கள்?
அஸ்திவாரம்
மேற்கூரை
கதவு சன்னல்கள்
கழிப்பறை குளியலறை
ஏதுமில்லாமல்
எப்படி சாத்தியமாயிற்று
இந்த வீடு?
வாஸ்து நிபுணரிடம்
வாஸ்து பார்த்ததுண்டா?
வாஸ்து பார்த்து
கட்டிய வீட்டை
இடித்த சம்பவம் ஏதேனும்....
பூமி பூசை போடுவது போல்
ஆகாய பூசை போட்டதுண்டா?
நாள் நட்சத்திரம் பார்த்ததுண்டா?
புதுமனை
புகுவிழா என்று
மற்ற பூச்சியினங்களுக்கு
அழைப்பு விடுத்ததுண்டா?
கட்டிடச் செலவில்
கால்வாசியை
மொய்யாய் வசூல்
செய்ததுண்டா?
ஆமாம்
நீங்கள் என்றேனும்
வீட்டு வரி செலுத்தியதுண்டா?
வீட்டை யாருக்கேனும்
வாடகைக்கு
விட்டதுண்டா?
வாடகை வசூல் செய்ய
அலைந்து அலுத்ததுண்டா?
சிலந்திகளே!
உங்கள் வீட்டின் மூலப் பொருளும்
கட்டுமான தொழிலாளிகளும்
நீங்களே!
மிகவும்
பலவீனமானது
உங்கள் வீடு!
மிகுந்த
படிப்பினையும்
உள்ளது உங்கள் வீட்டில்!
===============================================
சிலந்தி நாயகி அமைக்கும் சிறிய வீடு அழகிய மாளிகை . சிலந்தி வாயிலிருந்து வரும் ஒரு பசைத் திரவம் கொண்டு தன வலையைப் பின்னுகிறது . நாமும் வகை வகையாக வித விதமாக வலையில் பின்னுகிறோம். வார்த்தைப் பசை
வாயினில் வரமாக வந்ததோ என்னவோ ?
சிலந்தி ஒரு கோட்டுப் பாதையில்தான் பயணிக்கும்.
மாறினால் தன வலையில் சிக்கி தானே மடிந்து விடுமாம் பறவைகளில் தூக்கணாங் குருவியும் ஜந்துக்களில் சிலந்தியும் கட்டிடக் கலை நிபுணர்கள். ARCHITECTS OF BEAUTIFUL HOMES .
மனிதர்களின் வழக்கங்களை வைத்துக் கொண்டு சிலந்தியுடன் உரையாடும் உங்கள் கற்பனை இனிமை அருமை . இத்தகைய
கற்பனைகள் புதுக் கவிதைக்கு புதிய திசையும் வாழ்வும் தரும். மற்றும் பலராக ஓடும் கூட்டத்தில் கதா நாயகர்களும் கதா நாயகிய்ரும் சிலரே.
வாழ்த்துக்கள் சிலந்தி நூலினால் நூல் நெய்த அலிநகர் அஹமது அலி
~~~~கல்பனா பாரதி~~~~
===============================================