என் கனவுப் பெருவெளியில்

என் கனவுப் பெருவெளியில்
நடந்து செல்கிறாய்..
நினைவுத் துண்டங்களாய்
சப்திக்கின்றன சருகுகள்.
சில நேரம் இசையாய்..
சில நேரம் இரைச்சலாய்..

உன் முகமல்லாத
வேறொரு முகம்
ஒருபோதும் கனவாவதில்லை
என்னுள்..
எல்லோருக்கும் உன் முகம் தான்..
சில சமயம் எனக்கும்.

நினைவின் அழகான சாலையொன்றில்
'நாம்' அல்லாத
நானும் நீயும் சந்திக்கையில்
நினைவெங்கும் பெருமழை..
மீண்டும் அதே முதல் மழை..

கலைந்த பின்னும்
கனவின் முத்த ஈரம் என்னில்..
இதோ..
என்னருகில்
உறங்கிக் கொண்டிருப்பவளுக்கும்
கிட்டத்தட்ட உன் சாயல் தான்.

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (26-Nov-13, 1:09 pm)
பார்வை : 194

மேலே