சிந்திக்க வைத்த சிறுகதை
ஒரு காரோட்டி தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. வண்டி பஞ்சர் ஆன இடம் அருகில் ஒரு மனநல மருத்துவமனை இருந்தது. பக்கத்தில் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார்.
எதுவும் இல்லாததால் அவரே பஞ்சரான கார் டயரைக் கழட்டி ஸ்டெப்னியை மாற்றலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார். நான்கு போல்ட்களையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார். ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி விழுந்ததால் நான்கு போல்ட்களும் அருகில் திறந்து இருந்த கால்வாயில் விழுந்து விட்டன. எப்படி அவைகளை மீட்டெடுப்பதுவென யோசித்து கொண்டு இருந்தார்.
அப்போது "ஏதாவது பிரச்சனையா டிரைவர்" என்று ஒருவர் கேட்டார். அவரை பார்க்க மனநல மருத்துவமனையின் நோயாளிபோல் இருந்ததால் எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்களை மீட்டி எடுத்து விடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.
உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டை கழட்டி "இந்தா .. சக்கரத்தை மாட்டிக் கொள், போகும் வழியில் மெக்கானிக் கடையில் நான்கு போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்" என்று சொன்னார்.
"இவ்வளவு தெளிவா இருக்கறீங்க ! நீங்க எப்படி இந்த மருத்துவமையில்" என்று கேட்டார். அதற்கு அவர், "இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை. வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை" என்றார்.
எப்பவுமே ஒருவரின் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்.
குறிப்பு : படித்ததில் பிடித்தது. ஆனால் சற்று திருத்தப்பட்டு மெருகேற்றித் தரப்படுகிறது.