கறுப்புப் பணம்

சசட்டசபை மற்றும் செக்ரடேரியட் வளாகம். வருவாய்த்துறை அமைச்சரின் அறை. மற்ற மந்திரிகள் கூடியிருக்கின்றனர்.

“அதெப்படிய்யா! எப்படி அவரை கறை படியாத கரம்னு சொல்லறீங்க? கொஞ்சம் நம்பும் படியா சொல்லுங்க!” வருவாய்த்துறை அமைச்சர் ஆச்சரியப்பட்டார். எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.

“ஆமாங்கய்யா! நம்ம எம்.எல்.ஏ சதாசிவத்துக்கு ரொம்ப நல்ல பெயருங்க. அவ்வளவு நேர்மை. நம்ம கட்சி தொண்டர்கள், வட்ட மாவட்ட செயலாளர் நடுவிலே அவருக்கு நல்ல செல்வாக்குங்க” – இன்னொரு அமைச்சர் சொன்னார்.

“அப்படியா! நானும் கேள்விப் பட்டேன். சரி அப்போ, அவரை கூப்பிடுங்க, நான் பேசிட்டு சொல்றேன். முதல்வர் கிட்டே சொல்லி அவருக்கு ஏதாவது ஒரு வாரியம் தருவோம். தேர்தல் வேறே வருது. மக்கள் மத்தியிலே நல்ல பேர் எடுக்க உதவியா இருக்கும்”

இவர்கள் பேச்சில் அடிபட்ட சதாசிவம் நாற்பத்தி ஐந்து வயது எம்.எல்.ஏ. ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்து, ஊழல் செய்யாத அதிகாரி என பெயர் எடுத்தவர். பின்னர் அரசியலில் குதித்தவர். கடமை, கண்டிப்புக்கு பெயரெடுத்தவர்.

மூத்த அமைச்சரின் சிபாரிசினால், எம்.எல்.ஏ சதாசிவத்துக்கு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கப் பட்டது. வந்த சில நாட்களிலேயே அவரது நிர்வாகத்திறமையும், கண்டிப்பும் அனைவரையும் கவர்ந்தது.

கொஞ்ச நாள் கழித்து, முதல்வருக்கு சதாசிவத்திடம் நம்பிக்கை வந்து விட்டது. பெரிய பொறுப்புகள் கொடுக்க ஆரம்பித்தார். இரண்டு வருடத்திலேயே , உதவி அமைச்சர் பதவி சதாசிவத்தின் கைக்கு வந்தது.

சதாசிவம் மிகத்திறமையாக பணி புரிய ஆரம்பித்தார். சதாசிவம் எதையும் நேருக்கு நேர் துணிவாக சொல்லக் கூடியவர்.செய்யக் கூடியவர்.

வருடங்கள் உருண்டோடின. தேர்தலும் வந்து போய் விட்டது. இப்போது முதல்வரின் வலது கரமாகிவிட்டார்.

கடந்த மூன்று வருடங்களாக , உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.
ஒருநாள், முதல்வரிடம் சதாசிவம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்.

சதாசிவம் சொன்னார்: “ஐயா! தவறாக நினைக்க வேண்டாம்! நம்ப அமைச்சர்களில் சிலர் தவறான வழியில் நிறைய கறுப்புப்பணம் சேர்த்து வைத்திருப்பதாக நிறைய வதந்தி வருகிறது. அது பற்றி ஆராய வேண்டும்.”

‘அப்படியா ! நான் கூட கேள்விப் பட்டேன். மத்திய அரசு வேறே லோக் பால் சட்டம், கறுப்பு பணம் ரெய்ட் அப்படின்னு புதுசு புதுசா கொண்டு வராங்க. சி பி ஐ, இன்கம் டாக்ஸ், வந்து நம்ம ஆளுங்களை பிடிக்கறதுக்கு முன்னாடி, நாமே அவங்களை கண்டு பிடிச்சு கட்சியை விட்டு துரத்திடலாம். சதாசிவம், நீங்க இது பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுங்க. தகுந்த நடவடிக்கை எடுத்துடலாம்”

“நிச்சயமா ஐயா! இதிலே நம்ம மூத்த அமைச்சர்கள் இரண்டு பேர் சம்பந்தப் பட்டிருக்காங்கன்னு தோணுது. நிச்சயமா தெரியலே. இவங்க எப்படி கறுப்பு பணத்தை பதுக்கறாங்க, எந்த வங்கி இவங்க கறுப்பு பணத்தை சலவை பண்ணி வெள்ளையா மாத்தறாங்க போன்ற விஷயங்களை கண்டுபிடிச்சி வெளிலே கொண்டு வரணும்னா, மத்திய அரசு உதவி வேணுமே! இது விஷயமா ஆராய எனக்கு இன்னும் அதிகாரம் வேணும். உங்க உதவி தேவை ஐயா” – வினயமாக கேட்டார் சதாசிவம்.


“கட்டாயம். நான் உங்களுக்கு முழு அதிகாரம் தரேன். வெளிலே கொண்டு வாங்க. நம்ம கட்சிக்கு நல்ல பேர் கிடைக்கும். நீங்க வங்கிகள் கணக்கு தணிக்கை செய்ய உதவியா மத்திய அரசின் சிபிஐ, ஆர்.பி.ஐ. அதிகாரிகளின் உதவிக்கு உடனே ஏற்பாடு பண்றேன். மத்திய அரசு ஆட்சி, நம்ம கட்சி தானே! காதும் காதும் வெச்சா மாதிரி காரியம் பண்ணுங்க. குட் லக்.” விடை கொடுத்தனுப்பினார் முதல்வர்.

****

சதாசிவம் முழு மூச்சில் செயலில் இறங்கினார். மத்திய அரசின் அதிகாரிகளைக் கொண்டு , சந்தேகத்துக்கிடமான வங்கிகளை, முக்கியமாக, சில வெளி நாட்டு வங்கிகளை தணிக்கை செய்ய பணித்தார்.

ஒருவருக்கும் சந்தேகம் வராதபடி, “ஸ்பாட் ஆடிட்”, ‘அந்நிய செலாவணி தணிக்கை’, ஸ்டாட் ஆடிட் என்று வாயில் நுழையாத பெயர்களில், தணிக்கை செய்து, கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தார்.

****

இரண்டு மாதம் கழித்து:

முதல்வர் சதாசிவத்தை கூப்பிட்டார்.

“என்ன ஆச்சு சதாசிவம், ஏதாவது பிடி பட்டதா? யார் சிக்கினார்கள்?”- முதல்வரின் கேள்விக் கணை.

“ஒன்றும் சரியாக சிக்கவில்லை ஐயா. பெரிய அளவில் ஒன்றும் கிடைக்க வில்லை. ஆனால், எனக்கு ஒரு துப்பு கிடைத்திருக்கிறது. வெளி நாட்டு வங்கி ‘ஹான்டிரஸ்ட் பேங்க்” கிளையில், நமது அமைச்சர்கள், பெரிய அதிகாரிகள், பெரிய தொழில் அதிபர்களின் கணக்கு வழக்கு, பெரிய அளவில் நடப்பதாக செய்தி”

“அப்படியா?”.

“ ஆமாம் ஐயா. பத்து நாளாக, மத்திய அரசு , என் அதிகாரிகள் எல்லாம், அங்கே தணிக்கையின் பெயரில், சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் விவரம் கிடைத்திருக்கிறது. நான் நேரில் போய் உண்மையை வரவழைக்கிறேன். இரண்டு நாளில் உங்களிற்கு நல்ல சேதி சொல்கிறேன்”

“வெற்றி பெற வாழ்த்துக்கள்” – விடை கொடுத்தார் முதல்வர்.


***

அடுத்த நாள், சதாசிவம், மும்பையிலுள்ள ஹான்டிரஸ்ட் வங்கியின் தலைமை காரியாலயத்திற்கு விஜயம் செய்தார். அங்கிருந்த சிபிஐ மற்றும் தணிக்கை அதிகாரிகளுடன் தனித்தனியே பேசினார். பின்னர், நேராக வங்கியின் தலைமை அதிகாரியின் அறைக்குள் நுழைந்தார்.

“நான் மினிஸ்டர் சதாசிவம். எனக்கு எல்லாம் தெரியும். சொல்லுங்க! இங்கே அமைச்சர்கள் யாரெல்லாம் கணக்கு வைத்திருக்காங்க?எத்தனை கோடி ரூபாய்?’”- கொஞ்சம் கோபமாக கேட்டார்.

“சே! சே! அப்படி எதுவும் கிடையாதே!” – வங்கி அதிகாரி தீர்மானமாக மறுத்தார்.

“என்னிடம் ஆதாரம் இருக்கு. நீங்க எப்படி இங்கே கறுப்பு பணத்தை வெள்ளையாக மாத்தறீங்க?”- சதாசிவம் விடவில்லை.

“இந்த வங்கியிலே, நாங்க அப்படி எதுவும் செய்யறது கிடையாதே! வேண்டுமென்றால், நீங்க தணிக்கை பண்ணிக் கொள்ளுங்கள்”- வங்கி அதிகாரி திட்ட வட்டமாக சொன்னார்.

“இதோ பாருங்க! இப்போ நீங்க எனக்கு இங்கே கறுப்பு கணக்கு வைத்திருக்கும் அமைச்சர் பெயரை, அவங்க பினாமி பெயர் சொல்லலைன்னா, உங்களை பிடிச்சு ஜெயிலில் போட்டுடுவேன். என்னோட அதிகாரம் என்னன்னு தெரியும் இல்லையா உங்களுக்கு?” – சதாசிவம் மிரட்டினார்

“மினிஸ்டர் சார், நீங்க என்ன பண்ணினாலும், நான் எதுவும் சொல்ல மாட்டேன். எனக்கு எதுவும் தெரியாது.”- அதிகாரி

“இதோ பாருங்க! நீங்க தவறு செய்யரவங்களுக்கு துணை போகறீங்க. இது ஒரு பெரிய குற்றம் தெரியுமா? உண்மையை சொல்லுங்க. ரகசியமா இருக்கும். நீங்க , அரசியல்வாதிகள் பெயர் சொன்னால், நான் நிச்சயம் உங்கள் பதவி உயர்வுக்கு ஏற்பாடு பண்றேன். உங்கள் முழு பாதுகாப்புக்கு நான் காரண்டி. சொல்லலைன்னா, உங்களுக்கு பத்து வருடம் கடுங்காவல் உறுதி’”

“இதோ பாருங்க மினிஸ்டர் சார், திரும்பவும் சொல்றேன். நீங்க சொல்லறா மாதிரி இங்கே எதுவும் கிடையாது” – வங்கி அதிகாரி ஆணித்தரமாக மறுத்தார்.

சதாசிவத்திற்கு கோபம் கொப்பளித்தது. “ நீங்க பொய் சொல்லறீங்க. எங்க அமைச்சர்கள் உங்க கிட்டே கணக்கு வெச்சிருக்காங்க. எனக்கு நல்லா தெரியம். இதோ என் கிட்டே லிஸ்ட். அவங்களே ஒப்பு கிட்டு சொன்னது. இப்போ சொல்லுங்க. சொல்லறீங்களா, இல்லே என்கவுண்டேர்லே போட்டு தள்ள ஏற்பாடு பண்ணவா?” சதாசிவம் மிரட்டினார். தனது பாக்கெட்டில் கையை விட்டார்.

“என் உயிரே போனாலும், நான் எதுவும் சொல்ல முடியாது மினிஸ்டர் சார்”- வெளிறிய முகத்துடன் வங்கி அதிகாரி சொன்னார்.

"அப்போ யார் கேட்டாலும் எந்த தகவலும் கொடுக்க முடியாது?" - சதாசிவம்

"யார் பற்றியும் எந்த தகவலும் கொடுக்க எனக்கு அனுமதி இல்லை மினிஸ்டர் சார். சாரி" - அதிகாரி.

" ம். அப்படியா !"சதாசிவம் இரண்டு நிமிஷம் யோசனை பண்ணினார்.

“சரி! அப்படின்னா, உங்க வங்கியிலே எனக்கும் கணக்கு ஒன்று தொடங்கணும். ஐநூறு கோடி இருக்கு. கஷ்டப் பட்டு சம்பாதித்தது. என்ன பண்ணனும் சொல்லுங்க?”- சதாசிவம், பாக்கெட்டிலிருந்து தனது பேனாவை எடுத்தபடியே.



*** முற்றும்.
இது முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கதை. ஜெப்ரி ஆர்ச்சரின் தாக்கம்.

எழுதியவர் : முரளி (19-Dec-13, 10:26 am)
Tanglish : karuppup panam
பார்வை : 383

மேலே