கணிதமும் கவிதையும் - ஒரு சிறு முயற்சி

பிடித்ததால்
செலவு - என்மனம்
வரவு - உன்மனம்

நடந்த பரிமாற்றத்தில்
தரகு -
விமர்சிக்கும் தகுதி !!!

_____________________________

ஒற்றுமை கூட்டி
வேற்றுமை கழிந்து
அன்பைப் பெருக்கி
வெறுப்பை வகு !!!

_____________________________

இன்ப நினைவை
தொகைப்படுத்து
துன்ப நிகழ்வை
வகைப்படுத்து !!

_____________________________

நீ என்ன அல்ஜிப்ராவா
புரியாத புதிராகவே எப்பொழுதும் !!!

_____________________________

வாழ்க்கைப் பின்னத்தில்
தகு பின்னமும்
தகா பின்னமும்
பணம் பார்த்தே
மனம் பார்த்தன்று !!

_______________________________

உன்னைக் கண்ட
நாள் முதல்
திசையிலியாய் நான்

உன்னைத்தொட
நான் இட்ட கோடு

தொடுகோடாக்க நான் முயல
இணை கோடாக்குகிறாய் நீ !!

___________________________________

பூஜ்ஜியமாய்
இருந்த என்னை
உயர்த்திப்பிடித்த
இயல் எண் நீ !

நீயும் நானும் இணைந்தே
முழு எண்கள்

நீயின்றி நான்
என்றும் பூஜ்ஜியமே !!

__________________________________

கணித வடிவியலின்
இலக்கணம் நீ !
அமுதசுரப்பி நீ !

நின் வளைவுகள்
கோடுகள்
வடிவுகள்

இராமனுஜம்
கண்டிருந்தால்
கணிதத்தில்
புதுமை பல
புகுத்திருப்பான் !!!

__________________________________

பெண்ணே
உன்னுலகில்
சிறு புள்ளி நான்

உனது அன்பே
நிபந்தனையாய்

உன்னைசுற்றியே
எனது
வாழ்வின் நியமப்பாதை

என்னை இயக்கும்
இயக்குவரை நீயே !!!

_________________________________

நேர்மையில்
நேர்கோடாய் இரு

விட்டுக்கொடுப்பதில்
வளைகோடாய் இரு

உன் இணைக்கு
இணைகோடாய் இரு

உன்மேல் அன்புகொண்டவர்களுக்கு
எப்பொழுதும்
தொடுகோடாய் இரு !!

________________________________




தோழமைகளுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

எழுதியவர் : வானதி (1-Jan-14, 12:53 pm)
பார்வை : 730

மேலே