வாகை சூட்டுவோம் வாருங்கள்

பழந்தமிழர் திருவிழா
தாய் தமிழ் திருநாள்
தைப் பொங்கலில்
வாருங்கள் ,இளையபாரதமே
ஒன்றிணைவோம்!

வீரம் விளைந்த
இரத்த சரித்திரம் படைத்த
நம் தாய்மண்ணில்
தாய் தந்தை இருந்தும்
துணையற்று தவறிச்
செல்லும் வருங்கால
சமுதாயத்திற்கு புரிய
வைப்போம் மண்ணின் பெருமையை !

செம்மொழியான தமிழ்மொழியை
செங்கோலேந்த செய்வோம் ,
தமிழ்ப் பெருமையை
தலைசாய்க்கும் மனங்களையும்
மானிடர்களையும் செப்பனிட்டு !

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த
தாயகத்தில் சமத்துவப் பொங்கல்
கொண்டாடி வளர்த்திடுவோம்
சகோதரத்துவத்தை !

பஞ்ச பூதங்களுக்கு
நன்றி சொல்லும்
செந்தமிழ் பொங்கல் விழாவில்
பசியுற்றோருக்கு பசியாற்றும்
வழியையும் இயலாதவர்களை
ஏற்றிவிடவும் கற்றுக் கொடுப்போம்
வாருங்கள் இயன்றவரை
இன்றைய சமுதாயத்தினருக்கு!

மறத் தமிழர்கள்
வாழ்ந்த மானம்
காத்த தமிழினத்தில்
பைந்தமிழ்ப் புலவன்
பாரதியின் கனவு தேசத்தில்
வெற்றிக் கொடி ஏற்றுவோம் !
பார் எங்கும் பரவச் செய்வோம்
தமிழ் மணத்தை! வெற்றிவாகை
சூடி மகிழ்ந்திடுவோம்
முத்தமிழிற்கும்
வீரத் தமிழினத்திற்கும் !

------கார்த்திகா AK

எழுதியவர் : கார்த்திகா AK (15-Jan-14, 9:48 am)
பார்வை : 70

மேலே