என்று மடியுமெங்கள் அடிமை மோகம் பொங்கல் கவிதை போட்டி
என்று மடியுமெங்கள் அடிமை மோகம்? (பொங்கல் கவிதை போட்டி )
உலகுக்கு வாழ்வியல் சொன்னான்
எம் தலைவன் வள்ளுவன்
கடல்தாண்டி வீரத்தமிழ்க்கொடி நட்டான்
எம் மன்னன் சோழன்
ஆதித்தமிழ்குடி வரலாறு போற்ற
வந்தாரை வாழ வைத்தோம் அவர்தம்
அடிமையாகி அனாதைகளாய் நின்றோம்
ஆப்பிரிக்க கரும்பின் சாறும்
மலேசியா ரப்பர் பாலும்
எம் இனத்தின் செங்குருதி
ஈழத்தேயிலை மணம் எம் தமிழர் உயிர்
சயாமில் தண்டவாளங்களாய் கிடப்பது
லட்சம் தமிழனின் எலும்புக்கூடு
தமிழர் வரலாறு மறந்தோம்
தாய் நாட்டிலே பற்றிழந்து பிரிந்தோம்
மொழி, உடை, உணவு மாற்றி உணர்வற்று திரியும்
இளைய தமிழனே நினைவிற்கொள்,
உன் குருதியில் பிரித்தெடுத்த உறவுகள் தாம்
உலகெங்கும் தமிழ் பேசும் கூட்டம்!
புதியதொரு சபதம் ஏற்போம்
பிரிவினை வேர் அறுப்போம்
இனம் கூடி ஒன்றிணைந்து
அடிமை வாழ்வு களைவோம்
தன்மானம் தளராத தமிழனாய் சேர்ந்திருப்போம்!!!