எங்கும் தமிழை விதைப்பேன்

தமிழை என்றும் காக்க
தலையையும் தானம் தருவேன் - செந்
தணலில் எரித்தால்கூட - செந்
தமிழை நானும் மறவேன்...

ஈன்றவள் தந்தது தாய்ப்பால் - அட
தமிழும் எனக்குத் தாய்ப்பால்
குறளில் குடித்தேன் முப்பால் - முத்
தமிழில் சுவைத்தேன் தேன்பால்...

என்னிலம் நன்னிலம் என்பேன் - அட
என்னுயிர் தமிழே என்பேன்
எங்கும்தமிழை விதைப்பேன் - எனை
புதைத்தாலும் தமிழாய் முளைப்பேன்...

பாரில் பலமொழி இருப்பு - அதில்
பைந்தமிழேத் தனிச் சிறப்பு
காரில் குதிக்கும் மழையும் - அட
கவிதைகள் இசைக்கும் தமிழில்...

சொல்வளம் கொண்டது தமிழாம் - இல்லை
பல்வளம் நிறைந்தது என்பேன்
தேனாய் இனிக்கும் தமிழாம் - இல்லை
அதைவிட இனிக்கும் என்பேன்...

எழில்வளம் கொண்டது தமிழாம் - இல்லை
பேரெழில் நிறைந்தது என்பேன்
இலக்கியம் கொண்டது தமிழாம் - பல்
இலக்கணம் தந்ததும் அதுதான் என்பேன்...

குன்றி லேறி உரைப்பேன் - என்
தமிழே வாழ்க வென்று
குறும்பா நெடும்பா தொடுப்பேன் - என்
தமிழே உயர்ந்தது என்று...

நாற் றிசைகளும் ஒலிக்கும் - என்
தமிழே என்றும் நிலைக்கும்
இவ்வுலகம் அழிந்தால்கூட - அது
இன்னொரு உலகம் படைக்கும்...!!!


---------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (5-Feb-14, 1:42 pm)
பார்வை : 6498

மேலே