கருகிய சிறகுகள்

விழி அசைவென்னும்
நினைவினில்
கடந்து போயின
நூறு நட்சத்திரங்கள்..
இருள்
அதிகம் சூழ்ந்த பயணம்..
ஆங்காங்கே
மனம்
கிழித்திடும்
ஒளிக் கீற்றுகள்..
தடம்
தெரியாத பாதை
நடைபோட
கால்கள் எனக்கில்லை..
இனம் புரியாத பயம்
கத்திவிட குரல் இல்லை..
பேரின்பமா
பெரும் துன்பமா.. தெரியவில்லை..!!
யார் நான்..
ஏன் இங்கு
பயணித்துக் கொண்டிருக்கின்றேன்..
இந்த பயணம்
எல்லை இல்லா பரந்த வெளியின்
எந்த புள்ளியில் இருந்து தொடங்கியது..
எதனை நோக்கி
பயணித்துக் கொண்டிருக்கின்றேன்..
ஏன் இத்தனை
வேகம் எனக்குள்..
விடை விளங்கவில்லை..!!
சற்றும் எதிர்பாராத
ஒரு சிறு தருணத்தில்
என் கட்டுப்பாட்டினையும் மீறி..
மிகப்பெரும்
ஒளி வெள்ளத்தினுள்
மோதிக் கரைகின்றேன்..!!
என் வீட்டு
சாளரத்தின் வழியே..
என்னை பார்த்து சொன்னான் ஒருவன்..
உறங்கிக் கிடந்தது போதும்..
எழுந்து வேலையினைப் பார் என்று..!!
அவன் காணாத
உலகம் ஒன்றினை
நான் கண்டுவிடுவேனோ
என்று..
என்மேல்
அந்த ஆதவனுக்கு
கொஞ்சம் பொறாமை போலும்
என்று கடிந்து கொண்டே சோம்பல் முறித்தேன்..!!