உண்மை ஆன்மிகம்
ஆதிப் பரம்பொருள்
மட்டும் இருக்கையிலே
ஆசைகொண்டு சலனித்து
சக்தி பிறந்தது.
சக்தியின் வெளிப்பாடே
ப்ரபஞ்சம் – என
வேதாந்தம் விழைகிறது.
இறை குறித்தும்
இறையின் நிலை குறித்தும்
பல மதங்களிலும்
பலவாறாய்க் கதைகள்.
இறை தனி
இயற்கை தனி
எல்லாவுயிரும் தனியென்று
எல்லோரும் நம்புகிறோம்.
ப்ரபஞ்சத்தில் எங்கோ
இருக்கிறது இறை – இங்கே
அவசியம் நேருகையில்
அவதாரம் செய்கிறது.
பூசை செய்யுங்கள்
பாட்டுப் பாடுங்கள்
படையல் போடுங்கள்
பல்லாக்கு தூக்குங்கள்
விரதம் இருங்கள்
குறிப்பிட்ட காலத்தில்
கண் விழித்திருங்கள்
கவலையோடு கைகூப்புங்கள்
ஆலயம் செல்லுங்கள்
அருச்சனை செய்யுங்கள்
அன்னம் இடுங்கள்
ஆ தானம் செய்யுங்கள்
இப்படியெல்லாம் செய்து
எப்போதும் வேண்டி நின்றால்
இறை தன் கண்திறந்து
நம்மில் அருள் நிரப்பும்
இம்மை வாழ்க்கை
இன்பமாயிருப்பதோடு
மரணித்த பின்னர்
சொர்க்கம் போவீர் – அன்றி
இறையின் இருப்பிடத்தில்
இனிதே வாழ்வீர்.
இப்படியெல்லாம் இங்கே
பலரும் பகரக் கண்டேன்.
இறையை கதைப்பொருளாய்
அதன் அருளைப் பண்டமாய்
கொடுத்தல் வாங்கல்
செய்தலே ஆன்மிகம் என்கிறார்.
உள்ளுக்குள்ளேயே
ஓர் உணர்வாய்
மறைந்து உறைந்திருப்பதை
வெளியிலிருப்பதாய்
வி(வ)காரம் செய்கின்றோம்.
நம்மில் பரவியிருப்பது
நம்பிக்கையின்மையும்
அடிப்படையில் பயமும்
என்பேன்.
ஆலயங்களில் கூட்டம்
எப்போதும் அலைமோத
ஏராளமாய் தானங்களும்
எங்கு நோக்கினும்
எப்போதும் மேடைபோட்டு
இறைக்கதைகள் பரப்பலும்
கும்பல் கும்பலாய்
பக்திச் சுற்றுலாவென
பரதேசம் போகலும்
மிகுந்திருக்கும் காலத்தில்
பலர் வாழ்வும் பரிதவிப்பில்
புரண்டிருக்கும்
காரணம் ஏன்?
பக்திக் குறைவோ
படையல்தான் சரியில்லையோ
உக்கிர விரதம் பூண்டால்
வக்கிரங்கள் போய்விடுமோ
எவர் கண்பட்டும்
வந்ததுவோ இத்துன்பம்
பலி கொடுக்கலாமோ
யாரையும் பலி போடலாமோ
இறையே இருக்கிறதோ
எதிரிக்கே இறை உறவோ
இப்படியெல்லாம் இரங்கி
இழிநிலையில் சுற்றுவோரே
கணநேரம் என் கருத்தை
காதுகொண்டு கேட்கீரோ?
இரைச்சலிலோ
அலைச்சலிலோ
உடல்வருத்தலிலோ
ஊகங்களிலோ
பக்தி வளராது
ஆன்மிகம் சிறக்காது.
இறைகுறித்த நம் அறிதல்
குறையிருக்கும் காலம்வரை.
இப்பிறப்பும் சேர்வினையும்
முற்பிறப்பு ஊழ்வினையெனின்
முதன்முதற் பிறப்பு நிகழக்
முழுக்காரணம் என்?
இறையென்பது
எங்கோ இருப்பதில்லை
எங்கும் – ஏன் நம்முள்ளும்
இருப்பதென்று
உண்மையாய் உணருங்கள்.
நம்மிலிருப்பதே
எங்குமிருப்பது.
மலையும் மண்ணும்
நீரும் நெருப்பும்
பயிரினமும் பறப்பனவும்
விலங்குகளும் நம்முடலும்
அடிப்படையில் ஓரே
அணுக்குவியல் என்றுணர்வீர்.
நம்மனமே நம்மை
தனிப்பொருளாய் – மற்றெல்லாம்
வெளிப்பொருளாய் வேடிக்கைக்
களிசெய்தல் காணீர்.
எவ்வுள்ளும் உறைவது
ஒன்றென்றுணர்வீர்.
எல்லாமே ஒன்றென்றால்
ஒழியாதா பேதமெல்லாம்?
பேதம் ஒழிந்திட
பேதமை போய்விடுமே!
அடுத்தவரை அடித்துத்தின்னும்
ஆசைதான் மறைந்திடுமே!
நம்முணர்வுத் தூண்டுதலே
எண்ணங்களாய் வாக்காய்
நம் செயலாய் மாறுகையில்
அதன் விளைவுகட்கும்
முதற்பொறுப்பு நாமன்றோ?
மற்றுயிர்பால்
மாறாத அன்பு செய்வீர்
மற்றோர் பொருள்பால்
மயங்காத சிந்தை கொள்வீர்.
பொதுவில் தவறென்று
மனிதகுலம் கூறுவதை
எது நேரிடனும்
எடுத்தாளல் தவிர்ப்பீர்.
சரியென்றும் தர்மமென்றும்
சான்றோர் சொன்னதெல்லாம்
சத்தியமாய் உடன்பற்றி
உண்மையாய் வாழ்வீர்.
உடலுழைப்பில்
ஊக்கம் கொள்வீர்.
பிறர் நலத்தில் – உண்மை
நாட்டம் கொள்வீர்.
உண்மையாயிருக்க
உண்மை ஆசை கொள்வீர்.
தன்மையோடு பழக
தணியாத விருப்பம் கொள்வீர்.
காசு பணம் புகழ்க்காக – மனம்
மாசு படுத்தாதீர்.
தலைமுறைக்கு வேணுமென்று
தவறாய்ச் சேர்க்காதீர்.
உள்ளொன்று புறமொன்று
ஊர்வம்பு பேசாதீர்.
சுள்ளென்று பேசி
சுற்றம் கலைக்காதீர்.
பகட்டுப் பக்தியிலும்
சக்கைச் சடங்கினிலும்
இறை திருப்தியாகுமென
இழிகணக்கு போடாதீர்.
நம் கணக்கு
நம் கையெழுத்தில்
நாமே எழுதுவதை
நயமாய் புரிந்துகொள்வீர்.
புண்ணியம் பாவமென்று – செயல்
பண்ணியபின் எண்ணாதீர்.
எண்ணத்தில் தோன்றும்போதே
எச்சரிக்கை கையாள்வீர்.
நமக்கு துன்பம் தருமெதையும்
பிறர்க்குத் தரவேண்டாம்.
ஆன்மிகத்தின் அடிப்படையே
இதுவென்றுணர்வீர்.
நல்லியல்புகளே நம்மை
இறைநிலைக்கு இட்டுச்செல்லும்.
நம்புங்கள் நலம் பெறுங்கள்
வாழ்க நீவிர்!