பாடெனச் சொல்லியது

சில்லென்று இருந்த அந்த
சிறுகாலைப் பொழுதில் அன்று
சிட்டுக் குருவி ஒன்று
சிச்சியென சீட்டி அடித்தது.

சீட்டி அடித்து அது
வீட்டின் வாசல்புறம்
தத்தித் தாவி காலால்
தத்திய அளவெடுத்தது.

எடுத்திட்ட அளவுகளை
படித்துக் காட்டுதல் போல்
வட்டத் தலையதனை
வாகாய்த் திருப்பியது.

திருப்பிய விழித்திரையில்
சுருட்டிய புழுவொன்றை
கருத்தில் கொண்டு அது
பருத்துப் பூரித்தது.

பூரிப்பில் தன் சிறகை
பூரணமாய் விரித்த அது
பூநாகம் தனைக் கொத்திப்
புல்லரித்துச் சிலிர்த்தது.

சிலிர்க்கும் சிண்டுடனே
சிள்வண்டு தாண்டக் கண்டு
கண்டும் காணாதது போல்
மண்டையை ஆட்டியது.

ஆட்டிய புலிங்கம் அது
நீட்டுக்கால் குளவியொன்றை
அலகால் குத்திக் குத்தி
வாட்டியே வதைத்தது.

வதைத்த இறுமாப்பில்
அண்ணாந்து எனைப் பார்த்து
பாடிடும் புலவர் என்றால் இதைப்
பாடெனச் சொல்லியது.

.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (27-Feb-14, 1:08 pm)
பார்வை : 146

மேலே