படிக்க அதிகம்பே ரில்லைஎழுசீர் ஆசிரிய விருத்தம்

படிக்க அதிகம்பே ரில்லை=எழுசீர் ஆசிரிய விருத்தம்=

பண்ட மாற்றில் கருத்துகள் பதியும்
பயிற்சிகள் எனக்குள் இல்லை!
கண்ட வுடனே கவிதை ருசித்தால்
கருத்துகள் நிற்பதும் இல்லை!
உண்டதும் செரிக்கா உணர்வுகள் தோன்றின்
ஒதுங்குவேன்! எதற்குத் தொல்லை!
சண்ட மாருதக் கவி,நா னில்லைதான்!
சாகும் வரை,நான் முல்லை!

கொண்டு தாருமோர் விருதெனக் கேட்டுக்
குழையும் எண்ணமும் இல்லை!
கண்டுகொள் ளாதவர் கண்டுமென் னுள்ளே
கவலைகள் ஏதுமே இல்லை!
பண்டை யாப்புகள் படைத்து வருகிறேன்
படிக்க அதிகம்பே ரில்லையென்(று)
உண்டும் மனத்துளே ஒருகுறை யதுவுமே
உரைக்க நடப்பதொன் றில்லை!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (2-Apr-14, 11:03 am)
பார்வை : 160

மேலே